அரச ஊழியர்களுக்கான 5  ஆயிரம் ரூபா கொடுப்பனவில் உதவி ஆசிரியர்கள் உள்ளடக்கப்பட வேண்டும்

0
311
Article Top Ad

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5  ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவில் நிரந்தர நியமனம் வழங்கப்படாதுள்ள உதவி ஆசிரியர்கள் உள்ளடக்கப்படவில்லை. இத்திட்டத்தில் உதவி ஆசிரியர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்று, பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

சமகால பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு விரைவாக அவர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கும், கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் செந்தில் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச ஊழியர்களுக்கும் 5 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவை சம்பளத்துடன் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

ஆனால் இந்த விடயத்தில் உதவி ஆசிரியர்கள் உள்ளடக்கப்படவில்லை. ஆசிரிய நியமனத்துக்கான அனைத்து தகமைகளையும் இவர்கள் முழுமையாக பூர்த்தி செய்துள்ள சூழலில், இன்னமும் இவர்களுக்கு நிரந்தர நியமனமும் வழங்கப்படவில்லை.

இந்த வாரம் நான் பதுளை மாவட்டத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்ட போது, உதவி ஆசிரியர்கள் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவில்லை எனவும் அரசால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர்.

நான் ஊவா மாகாணத்தில் கல்வி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஊவா மாகாணத்தில் 90 வீதம் ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 சதவீதம் 2019 – 2022 ஆம் ஆண்டு வரை வழங்கப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது. நான் கல்வி அமைச்சராக இருந்த போது ஒரே நாளில் 400 உதவி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனத்தை பெற்றுக்கொடுத்திருந்தேன்.

இதனால் நிரந்தர நியமனத்தை வழங்குவது என்பது மிகவும் கடினமாக காரியம் அல்ல என்பதை நான் நன்கு அறிவேன். நியமனம் வழங்கும் முறைமை தாமதமடைவதற்கு காரணங்கள் எதுவும் கிடையாது.

ஆனால் இந்த நியமனங்களை வழங்குவதில் ஏன் இந்த தாமதம் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. எனவே விரைவாக இவர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்க கல்வி அமைச்சு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதுடன், 5 ஆயிரம் ரூபா நிவாரண தொகையையும் இவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.