இரணைதீவில் கைதான இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

0
319
Article Top Ad

கிளிநொச்சி – இரணைதீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 12 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 12 மீனவர்களையும் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இரணைதீவுக் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 12 இந்திய மீனவர்களும் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களது படகுகள் இரண்டும் நேற்று சனிக்கிழமை இரவு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து இன்றைய தினம் குறித்த 12 மீனவர்களும் அவர்களது படகுகளும் சட்ட நடவடிக்கைக்காக கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து இன்று பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரணியம் முன்னிலையில் அவர்கள் முற்படுத்தப்பட்டனர்.

இதன்போது குறித்த மீனவர்களை இம்மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த மீனவர்களின் விபரங்களை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள் பெற்று அவர்களுக்குத் தேவையான உணவு, உடை என்பவற்றை வழங்கியிருந்தனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள மீனவர்கள் 12 பேரும் இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.