225 எம்.பிக்களையும் கொல்ல வேண்டும் என்பதே மக்களின் இப்போதைய விருப்பம்! – டிலான் தெரிவிப்பு

0
231
Article Top Ad

 

“நாட்டில் மக்களுக்கு அரசியல் வெறுத்துவிட்டது. அன்று பாராளுமன்றத்துக்கு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டபோது  எதிர்த்த மக்கள் இன்று ஏன் பாராளுமன்றத்துக்கு குண்டுத்தாக்குதல் நடத்தவில்லை எனக் கேட்கும் நிலை உருவாக்கியுள்ளது. இதனால் தேர்தலால் தெரிவுசெய்யப்படாத அதிகார வர்க்கத்துக்கு நாட்டைக்  கொடுப்போம் என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள். அதனால் மக்களை, தேர்தலைச் சந்திக்காத தரப்பினரால் அரசை அமைக்கும் சூழல் உருவாகலாம்.”

– இவ்வாறு அரச தரப்பு எம்.பியான டிலான் பெரேரா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி கோட்டாபாய  ராஜபக்ச எதிர்பார்த்த பொறிமுறை மாற்றம் இன்று இடம்பெற்றுள்ளது. இன்று பிரதான எதிர்க்கட்சியினர் இனவாதத்துக்கு எதிராகப் பேசுகின்றனர். ஆனால், வடக்கு – கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளை உரையாற்றக்கூட அனுமதிக்காத எதிர்க்கட்சி சட்ட ஆட்சி பற்றிப் பேசுகின்றது. நீதியின் சுயாதீனம் பற்றிப் பேசும் இவர்கள் ஆட்சியில் நீதித்துறையை கையில் எடுத்துச் செய்த செயற்பாடுகள் என்னவென்பது எமக்கும் தெரியும். அவ்வாறான நிலையில் இருந்து ஜனாதிபதி நாட்டை மாற்றியுள்ளார்.

இன்று நாட்டில் பொதுமக்களுக்கு அரசியல் வெறுத்துவிட்டது. அன்று பாராளுமன்றத்துக்கு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட வேளையில் எதிர்த்த மக்கள் இன்று ஏன் பாராளுமன்றத்துக்குக் குண்டுத் தாக்குதல் நடத்தவில்லை எனக் கேட்கும் நிலை உருவாக்கியுள்ளது.

225 எம்.பிக்களையும் கொல்ல வேண்டும் என்றே மக்கள் கூறுகின்றனர். இப்போது முகங்கொடுக்கும் கொரோனா நிலைமைகளுடன் அடுத்த சவால்களை மக்கள் முகங்கொடுக்கும் வேளையில் மக்களுக்கு அரசியல் வெறுக்கப்படும். இந்தியாவில் சில பிராந்தியங்களில் உள்ளது போன்று அதிகாரவாதம் இலங்கையிலும் உருவாகும் நிலை ஏற்படும்.

இலங்கையில் இன்றும் இந்த அதிகாரவாதம்  வெளிப்படுகின்றது. இராணுவத்தின் அதிகாரிகளின் மூலமாக உருவாகும் அதிகாரவாதத்தை மட்டும் நான் கூறவில்லை. அதையும் தாண்டிய ஒட்டுமொத்த அதிகாரவாதமும் தலைதூக்கும்.

ஏனென்றால் மக்களுக்கு அரசியல்வாதிகளை விட அதிகாரவர்க்கம் நல்லதென்ற நிலைமை உருவாகும். தேர்தலால் தெரிவு செய்யப்படாத அதிகார வர்க்கத்திடம் நாட்டைக் கொடுப்போம் என்ற மனநிலைக்கு மக்களே தள்ளப்படுவார்கள். அதனால் மக்களை, தேர்தலைச் சந்திக்காத தரப்பினரால் அரசை அமைக்கும் சூழல் உருவாகலாம். அதற்கு அரசியல்வாதிகளின் பிரிவினை செயற்பாடுகளே காரணமாக  இருக்கும்.

நான் இந்தச் சபையை 27 வருடங்களாகப் பிரதிநிதிதித்துவப்படுத்துகின்றேன். எனினும், இந்த அரசியல்வாதிகளின் பிரிவினை செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படவில்லையானால் அடுத்த முறை நான் இந்தச் சபையை   பிரதிநிதித்துவப்படுத்த மாட்டேன்” – என்றார்.