நான் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டால் கமலா ஹரிஸும் போட்டியிடுவார் – ஜோ பைடன்

0
157
Article Top Ad

2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட்டால் துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஸும் போட்டியிடுவார் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

79 வயதான ஜோ பைடன் அமெரிக்க வரலாற்றிலேயே அதிக வயதில் ஜனாதிபதியான முதல் நபராக சாதனை படைத்தவர். அதேபோன்று அமெரிக்காவின் முதல் கறுப்பின பெண் தெற்காசிய வம்சாவளி துணை ஜனாதிபதி என கமலா ஹரிஸ் பல சாதனைகளைப் படைத்தவர்.

தேர்தலில் வெற்றி பெற்று, சிறப்பாக செயற்பட்டு அமெரிக்க மக்களின் முழுமையான திருப்தியைப் பெற்ற தலைவர்களாக இவர்கள் இருவரும் அமெரிக்காவை வழி நடத்தி வருகின்றனர்.

போர் வெறி பிடித்த ஜனாதிபதிகளைப் பார்த்துப் பார்த்து சலித்துப்போன  அமெரிக்கர்களுக்கு, ஜோ பைடனும் கமலா ஹரிஸும் செயற்படும் விதம் அவர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிகுந்த மெத்தனம் காட்டினார். ஆனால் ஜோ பைடன் செயற்பட்ட விதம் அனைவரையும் கவர்ந்து விட்டது.

இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் கமலா ஹரிஸும் இணைந்து போட்டியிடுவாரா என்று ஜோ பைடனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்துள்ள ஜோ பைடன், நான் மீண்டும் போட்டியிடுவேனா என்று தெரியாது. ஒரு வேளை நான் போட்டியிட்டால் என்னுடன் கமலா ஹரிஸும் இணைந்து போட்டியிடுவார். கமலா ஹரிஸ் சிறப்பாக செயற்படுகின்றார் என்பது எனது எண்ணம் என்றார்.

இருவரும் பதவிக்கு வந்து ஒரு வருடம் ஆகின்ற நிலையில், அடுத்த தேர்தலில் ஜோ பைடன் போட்டியிடாவிட்டால் கமலா ஹரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்று பலமாக நம்பப்படுகிறது.

அவ்வாறு நடைபெற்றால் அமெரிக்க ஜனாதிபதி பதவியில் அமரும் முதல் கறுப்பினப் பெண், முதல் தமிழ்ப் பெண், முதல் இந்திய வம்சாவளிப் பெண், முதல் ஆசிய வம்சவாளிப் பெண், முதல் பெண் என்று பல பெருமைகளையும் சாதனைகளையும் கமலா ஹரிஸ் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமலா ஹரிஸின் தாய் இந்தியாவின்  தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதுடன், தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.