இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம்

0
313
Article Top Ad

இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 125 படகுகளின் உரிமையாளர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று முன்தினம் வியாழக்கிழமை தமிழ் நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

மீனவர்களது அனைத்துக் கோரிக்கைகளையும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த முதல்வர் மீனவர்களது கோரிக்கைகள் தொடர்பான கீழ்க்காணும் அறிவிப்புகளை வெளியிட்டார்.

இலங்கை அரசினால் பறிமுதல் செய்யப்பட்டு தற்பொழுது இலங்கையில் பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 125 படகுகளின் உரிமையாளர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும் பொருட்டு 108 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா வீதமும், 17 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதமும் மொத்தமாக 5.66 கோடி ரூபா நிதி வழங்கப்படும்.

கடந்த வடகிழக்கு பருவமழைக்காலத்தில் சேதமடைந்த 105 மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு இழப்பீடாக 5.66 கோடி ரூபா வழங்கப்படும்.

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களின் விடுதலை குறித்து மீனவர் சங்கப் பிரதிநிதிகள் முதல்வரிடம் வலியுறுத்தினார்கள். கைதுசெய்யப்பட்ட மீனவர்களில் மீதமுள்ள மீனவர்களை விடுதலை செய்யக் கடிதம் வாயிலாகவும் தொலைபேசி வாயிலாகவும் இந்த அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் வலியுறுத்தியதையும் மீனவ சங்க பிரதிநிதிகளுக்கு முதல்வர் தெளிவுபடுத்தினார்.

மேலும் இது தொடர்பாக நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவர் கனிமொழியை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் நேரம் பெற்று தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருடன் மீனவ பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்று தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலையை விரைவுபடுத்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும்படி முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

இந்நிகழ்வில் மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா. ஆர். இராதாகிருஷ்ணன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் ந.கௌதமன், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர், காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தெ.சு.ஜவஹர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் கே.சு.பழனிசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.