அநுராதபுரத்தின் இரண்டு கிராமங்களை வவுனியாவுடன் இணைக்குமாறு பத்திரம்

0
288
Article Top Ad

அநுராதபுரத்தின் இரு கிராமங்களை வவுனியா மாவட்டத்துடன் இணைத்து இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் நிலையில் அதற்கான அனுமதி கோரிய பத்திரம் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஈரப்பெரியகுளத்தில் சிதம்பரபுரம், கோமரசன்குளம், மதுராநகர் கிராம மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியே போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2015 இல் இருந்து 2019 வரையும் வடக்கு, கிழக்கில் இடம்பெறவிருந்த சிங்கள குடியேற்றங்களை நாம் தடுத்து நிறுத்தியிருந்தோம். எனினும், 2019 நவம்பர் மாதத்திற்கு பிற்பாடு வடக்கு மாகாணத்தில் வவுனியா, முல்லைத்தீவில் தென் பகுதியில் இருந்து சிங்கள மக்கள் கொண்டுவரப்பட்டு குடியேற்றப்பட்டு வருகின்றனர்.

வடக்கில் தமிழர்களின் விகிதாசாரத்தை மாற்றியமைப்பதற்காக இந்த நடவடிக்கை மிகத் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.

இந்தக் குடியேற்றத்தை இரண்டு வகையாக மேற்கொள்கின்றனர். ஒன்று, இங்குள்ள அரச காணிகளில் தென்பகுதியில் இருந்து சிங்களவர்களைக் கொண்டு வந்து குடியேற்றுவது. மற்றையது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு அநுராதபுரம் மாவட்டத்துடன் உள்ள கிராமங்களை வவுனியா மாவட்டத்துடன் இணைப்பதாக உள்ளது.

அண்மையில் போகஸ்வெவ கிராமத்திற்கு ஜனாதிபதி வந்தபோது திட்டமிட்டு கெப்பிட்டிகொல்லாவையில் உள்ள கிராமத்தில் இருந்து அநுராதபுரத்திற்கு செல்வது கடினம் எனவும் வவுனியா நகரத்திற்கு செல்வது இலகு என்பதால் தமது கிராமங்களை வவுனியாவுடன் இணைத்து விடுமாறு பிரதேசசபை உறுப்பினர் ஒருவரால் கோரப்பட்டது.

இதன் பிரகாரம் அண்மையில் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் அநுராதபுரம் கெப்பிட்டிக்கொலாவை பிரதேச செயலகத்தின் கனகவெவ என்ற கிராம சேவகர் பிரிவையும் பதவிய பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கம்பெலிய என்ற கிராம சேவகர் பிரிவையும் முழுமையாக வவுனியா மாவட்டத்துடன் இணைப்பதற்கான அனுமதிப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக நாம் பாராளுமன்றத்திலும் வெளியிலும் குரல்கொடுத்து வருகின்றோம் என்றார்.