இந்திய மீனவர்களின் படகுகள் யாழ்ப்பாணத்தில் ஏலத்தில் விற்பனை

0
251
Article Top Ad

யாழ்ப்பாணம் – காரைநகரில் வைத்து 135 இந்தியப் படகுகள் நேற்றுத் திங்கட்கிழமை ஏலத்தில் விடப்பட்டதில் 52 இலட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டன.

ஏலத்தின் நிறைவில் ஏலம் கேட்டவர்களால் மொத்தமாக 16 இலட்சத்து 63 ஆயிரம் ரூபா பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன் மிகுதிப் பணமும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் செலுத்தப்பட்டு படகுகள் அங்கிருந்து எடுத்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இலங்கைக் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் 135 படகுகள் காரைநகர் கடற்படைத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு தடுத்த வைத்திருந்த படகுகளே ஏலத்தில் விடப்பட்டன.

கொழும்பில் இருந்து வருகை தந்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளின் முன்னிலையில் நேற்றுக் காலை 9 மணிக்கு ஆரம்பமான ஏலத்திற்கான பணிகள் யாவும் மாலை 2 மணி வரை இடம்பெற்றன.

இதன்போது 135 படகுகளும் 52 இலட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபாவிற்கு ஏலம் விடப்பட்டன. இவற்றில் உட்சபட்சமாக ஒரு படகு 13 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.