கோட்டா – மஹிந்த தலைமையில் ஆளுங்கட்சியின் முக்கிய கூட்டம் – மின் நெருக்கடி தீர்வு குறித்தும் பேச்சு

0
208
Article Top Ad

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச  ஆகியோரது தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்றது.

அடுத்த வார நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

மின் நெருக்கடிக்குத் தீர்வு காணல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களைப் பயன்படுத்துதல், ஏற்றுமதிப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டன.

எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டம் தொடர்பில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச விசேட விளக்கமளித்தார்.

குறித்த கூட்டத்தில் தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அலி சப்ரி உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமரின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன, பிரதமரின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்புச் செயலாளர் பிரியந்த ரத்நாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.