நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு – கொரோனா அச்சத்தில் மக்கள்

0
281
Article Top Ad

நுவரெலியாவில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால் கொரோனா தொற்று அதிகரித்து விடுமோ என்ற அச்சத்தில் நுவரெலியா வாழ் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

நுவரெலியாவில் வார இறுதியில் சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏனைய விடுமுறை நாட்களிலும் வெளி மாவட்டங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தருகின்றார்கள்.

இவ்வாறு நுவரெலியாவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் கொரோனா தொற்று தடுப்பு பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார நடமுறைகளை பின்பற்றுவதில்லை. முகக் கவசங்களை அணியாமலும் இடைவெளிகளை பின்பற்றாமலும் அங்கும் இங்கும் அலைந்து திரிகின்றனர். இதனை எவரும் கண்டுகொள்வதில்லை. இதனால் இங்குள்ள மக்கள் கொரோனாத் தொற்று அதிகரித்து விடுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.

விடுமுறை நாட்களில் விக்டோரியா பூங்காவிலும் கிறகரி பூங்காவிலும் கிறகரி வாவி கரையிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக குவிந்திருக்கின்றார்கள். அத்தோடு நுவரெலியா வாவிக் கரையில் அமைக்கப் பட்டுள்ள களியாட்ட நிகழ்வுகளிலும் பெருந்தொகையான சுற்றுலாப் பயணிகள் குவிந்து காணப்படுகின்றார்கள்.

இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் விடுமுறை நாட்களில் நுவரெலியாவிற்கு வருகை தருவதால் வாகனத் தரிப்பிடங்களிலும் பிரதான பாதைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

இதேவேளை நாடு முடக்கப்பட்டிருந்த வேளையில் கொரோனாத் தொற்றாளர்கள் குறைவாகவே அடையாளம் காணப்பட்டனர். ஆனால் தற்பொழுது தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றனர். தற்பொழுதும் 25 தொற்றாளர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகமானவர்கள் தொற்று தடுப்பு வழிமுறைகளை பின் பற்றாததால் தொற்றாளர்கள் அதிகரித்து வருவதாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை இயக்குனர் வைத்தியர் மகேந்திர செனவிரத்ன தெரிவித்தார்.

நுவரெலியா மாநகர பொது சுகாதார அதிகாரி டீ.எம்.எஸ்.பீ.தெல்பிடிய தெரிவிக்கையில்,

சுற்றுலா பயணிகள் அதிகரிப்பதால் தொற்றாளர்கள் அதிகரிக்கவில்லை. இலங்கையில் ஏனைய பிரதேசங்களில் தொற்றாளர்கள் அதிகரிப்பது போலவே நுவரெலியாவிலும் தொற்றாளர்கள் அதிகரிக்கின்றனர் என்றார்.