இந்தியா – மேற்கிந்தியத் தீவுகளின் இரண்டாவது போட்டி இன்று

0
309
Article Top Ad

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது.

முதல் போட்டியில் சிறப்பான துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சால் இந்தியா வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் அணியில் மாற்றம் இருக்காது.

துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் நல்ல நிலையில் உள்ளனர். இஷான் கிஷானும், தீபக் ஹூடாவும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.

முன்னாள் அணித் தலைவர் விராட் கோலியின் ஆட்டம் ஏமாற்றத்தை அளித்தது. அவர் அதில் இருந்து மீண்டு சிறப்பான இன்னிங்சை வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.

கடந்த போட்டியில் சுழற்பந்து வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். யசுவேந்திர சாஹல் 4 விக்கெட்டும், அணிக்கு மீண்டும் திரும்பிய தமிழக வீரர் வொஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும் கைப்பற்றி முத்திரை பதித்தனர்.

இன்றைய போட்டியிலும் அவர்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேகப்பந்தில் முகமது சிராஜ், ஷர்துல் தாகூர் , பிரஷித் கிருஷ்ணா தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி மேற்கிந்தியத் தீவுகளுக்கு உள்ளது. ஏனென்றால், இதில் தோற்றால் அந்த அணி தொடரை இழந்து விடும்.

முதல் போட்டியில் மேற்கிந்திய வீரர்களின் ஆட்டத்திறன் மோசமாக இருந்தது. ஹோல்டர், பேபியன் அலன் தவிர மற்ற துடுப்பாட்ட வீரர்கள் யாருமே சரியாக ஆடவில்லை. மேலும் பந்துவீச்சும் எடுபடவில்லை.

அதை சரி செய்யும் விதமாக இன்றைய போட்டியில் செயல்படும் என்று எதிர்பார்க்கலாம். இரு அணிகளம் இன்று மோதுவது 135ஆவது போட்டியாகும். இதுவரை நடந்த 134 போட்டிகளில் இந்தியா 65இலும், மேற்கிந்தியத் தீவுகள் 63இலும் வெற்றி பெற்றுள்ளன. 4 போட்டிகளுக்கு முடிவு இல்லை. 2 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்தன. இன்றையதினம் மதியம் 1.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகிறது.