உக்ரைன் போரின் பின்னணி என்ன?

0
268
Article Top Ad

ஓட்டோமான் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, ரஷ்யப் பேரரசு கிரீமியா தீபகற்பத்தைத் தன்னோடு இணைத்துக்கொண்டது. ரஷ்யப் பேரரசில் உக்ரைன் இணைந்ததன் 300 ஆம் ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில், 1954 இல் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் அதிபர் நிகிதா குருஷேவ் கிரீமியாவை உக்ரைனுக்குப் பரிசாக வழங்கினார். 40 ஆண்டுகளில் சோவியத் ஒன்றியம் தகர்ந்துவிடும் என்று அவர் அன்று நினைத்திருக்க வாய்ப்பில்லை.

சோவியத் ஒன்றியம் 1991 இல் உடைந்தபோது, சோவியத்தின் அணு ஆயுதக் கிடங்குகளில் மூன்றில் ஒரு பகுதி உக்ரைனில் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் அது உலகின் மூன்றாவது பெரிய அணு ஆயுதக் கிடங்கு என்று கூறலாம். இதிலிருந்தே முன்பு நிலவிய உக்ரைன்-ரஷ்ய பரஸ்பர உறவைப் புரிந்துகொள்ள முடியும்.

பின்பு, இந்த அணு ஆயுதங்கள் அனைத்தும் சோவியத்திலிருந்து பிரிந்து சென்ற சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பின் கண்காணிப்பில் இருந்தன. உக்ரைன் 1994 இல் ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திட்ட பின்பு, தன்னிடம் இருக்கிற அனைத்து அணு ஆயுதங்களையும் 1996 இல் ரஷ்யாவிடம் ஒப்படைத்தது.

1991 இல் சோவியத் ஒன்றியம் சிதறுண்டதோடு பனிப்போர் முடிவுக்கு வந்தது. ஆனால், தன்னுடன் எல்லையைப் பகிர்ந்துகொண்டுள்ள முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளின் உள்நாட்டு அரசியல் மாற்றங்கள் ரஷ்யாவுக்குப் புதிய பாதுகாப்பு சவால்களைத் தோற்றுவித்துள்ளன.

கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மேற்கத்திய நாடுகளால் தூண்டப்படுகின்றன. குறிப்பாக, ஐரோப்பியக் கூட்டமைப்பு, அமெரிக்கா ஆகியவற்றின் வழிகாட்டுதலில் உள்ள வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் (நேட்டோ) உக்ரைன் சேர்வதற்கான முயற்சிகளைத் தனது பாதுகாப்புக்கான பெரும் அச்சுறுத்தல் என்று ரஷ்யா கருதுகிறது.

உக்ரைன் மக்களில் ஒருசாராரிடம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் ஆர்வம் இருக்கிறது. சோவியத் ஆட்சிமுறையில் கட்டுப்பாடுகளை அனுபவித்த அம்மக்கள், ஐரோப்பிய சுதந்திர ஜனநாயகத்தைப் பெரிதும் விரும்புகின்றனர். இதனால், உக்ரைன் அதிபர் தேர்தல்களில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்வதற்கு முன்மொழியும் தலைவருக்கே கூடுதல் ஆதரவு கிடைத்தது.

அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான சாத்தியங்கள் இன்னும் அங்கு உருவாகவில்லை. குறிப்பாக, அதன் வளர்ச்சி பெறாத பொருளாதாரம், வலுப்பெறாத ஜனநாயக அமைப்பு, அரசுக்கு எதிராக நடக்கும் தொடர் ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

மாஸ்கோவின் சுற்றுப்பாதையிலிருந்து கீவ் விலகி மேற்கத்திய சித்தாந்தத்தை நோக்கிய மாற்று வழியில் பயணிக்கத் தடைக்கல்லாக உக்ரைன் முன்னாள் அதிபர் விக்டர் யெனுகோவேய்க் இருந்தார். அவர் ஒரு ரஷ்ய ஆதரவாளர். 2010-ல் அவருடன் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பெண் வேட்பாளர் டைமோஷென்ஸ்கோ இருமுறை பிரதமராகப் பதவி வகித்தவர். இவர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் அங்கம் வகிக்க வேண்டும், அவ்வாறு இணைந்தால் உக்ரைன் செழிப்படையும் என்று வெளிப்படையாக ஆதரவு திரட்டியவர். உக்ரைனின் பாதுகாப்புக்கு நேட்டோவுடன் இணைவது முக்கியம் என்ற கருத்தைக் கொண்டவர்.

அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த அவர், அரசியல் கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தன் மருத்துவச் சிகிச்சைகளுக்காக ஜெர்மனி செல்லவும் உக்ரைனில் அரசியல் பதற்றம் தணியவும் உக்ரைன் நாடாளுமன்றத்தில் நவம்பர் 2013-ல் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து பேரலையைப் போல அங்கு போராட்டங்கள் வெடித்தன.

அதிபர் விக்டர் யெனுகோவேய்க் தலைமையிலான அரசு, ஐரோப்பிய ஒன்றியத்துடனான அனைத்துப் பேச்சுவார்த்தைகளையும் முடித்துக்கொண்டு ரஷ்யாவுடன் கைகோக்கத் தயாரானது. இதன் காரணமாக ஏற்கெனவே நடந்துகொண்டிருந்த போராட்டங்கள் மேலும் வலுப்பெற்றன. இந்தப் போராட்டங்களில் 18 காவல் துறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 130 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே, எதிர்க் கட்சியினருக்கும் அதிபர் விக்டர் யெனுகோவேய்க்குக்கும் இடையே ஒருங்கிணைந்த ஒரு அரசை நிறுவுவதற்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கும் ஒரு இடைக்கால ஒப்பந்தம் ஏற்பட்டது.

ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில் விக்டர் யெனுகோவேய்க் அதிபர் பதவியிலிருந்து விடுவிக்கப்படுவதாக நாடாளுமன்றம் பிரகடனப்படுத்தியது. அதற்கு முன்பே அவர் ரஷ்யாவின் உதவியை நாடி, அங்கு தப்பி ஓடினார். இதன் தொடர்ச்சியாக ரஷ்ய ஆதரவாளர்களுக்கும் ஐரோப்பிய ஆதரவாளர்களுக்கும் இடையே பெரும் மோதல்கள், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்குப் பிராந்தியங்களில் தோன்றின.

பூர்விக ரஷ்யர்கள் பெருமளவில் வாழும் கிரீமியாவில் கீவுக்கு எதிராகவும் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் வெடித்தன. ரஷ்ய ஆதரவாளர்கள் கிரீமியாவில் உள்ள அரசாங்கக் கட்டிடங்களையும் விமான நிலையங்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக உக்ரைன் முன்வைத்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்தது. மேலும், உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்காக ராணுவத்தை அனுப்பவும் மார்ச் 2014-ல் ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். கிரீமியாவில் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு ஒன்றும் நடந்தது. பெரும்பான்மையினர் ரஷ்யாவுடன் இணைய வாக்களித்தனர். இதை எதிர்பார்த்துக் காத்திருந்த ரஷ்யாவும் கிரீமியாவை ரஷ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்தது.

அதைத் தொடர்ந்து, ரஷ்யாவின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்தது. பனிப்போர் காலகட்டத்துக்குப் பிறகு ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு கடுமையான பாதிப்புக்குள்ளாகியது. உக்ரைனுடனான ரஷ்யாவின் உறவும் தீர்க்கவியலாத சிக்கலுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான அதிகாரப் போட்டியில் உக்ரைன் சிக்குண்டு தன்னுடைய நிலப்பரப்பை ரஷ்யாவிடம் இழந்தது. சர்வதேசச் சட்டங்களுக்கு ஒரு சவாலாக அமைந்துவிட்டது. உக்ரைனின் எல்லையோரப் பிராந்தியமான டான்பாஸில் ரஷ்ய ஆதரவுப் படையினருக்கும் உக்ரைன் ராணுவத்துக்கும் இடையே கடந்த 2021-லிருந்தே மோதல்கள் தொடங்கிவிட்டன.

அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன், ‘நோட்டோ’வுடன் உக்ரைன் சேர்வதற்கு ஊக்கமளித்தார். ஜோ பைடனுடனான காணோளிப் பேச்சுவார்த்தையின்போது இந்த முயற்சிகள் தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன என்று புதின் தமது தரப்பு நியாயங்களை முன்வைத்தார். அதற்கு பைடனின் பதில், ரஷ்யாவின் மீது கடுமையான பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்பதாகவே இருந்தது.

இதற்கிடையில், உக்ரைன் எல்லையில் படை குவிப்புக்கு புதின் உத்தரவிட்டார். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உக்ரைன் எல்லையை நோக்கி விரைந்தனர். கூடுதலாகத் தனது நேச நாடான பெலாரஸில் அணு ஆயுதப் போர்ப் பயிற்சியிலும் ரஷ்ய ராணுவம் ஈடுபட்டுவந்தது.

உக்ரைன் மீது முப்படைகளின் மூலமும் முழுத் தாக்குதலுக்கு உத்தரவிட்டுள்ளார் புதின். தாக்குதல் தொடங்கிய முதல் நாளிலேயே செர்னோபில் அணுமின் உலை இயங்கிய பகுதியை ரஷ்யா கைப்பற்றிவிட்டது. இந்நடவடிக்கை உக்ரைன் அரசை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஐரோப்பிய எல்லையில் இரு நாடுகள் மோதிக்கொள்வது இதுவே முதல்முறை.