ஊடக பிரதானிகளுடன் பிரதமர் சந்திப்பு!

0
124
Article Top Ad

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையிலுள்ள ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களை சந்தித்தார்.

நேற்று மாலை இந்த சந்திப்பு நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் போது பிரதமரின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி சமரதுங்க, நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பங்கேற்பாளர்களுக்கு விளக்கமளித்தார்.

சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரதமர் ஊடக உரிமையாளர்களிடம் தெரிவித்தார். இந்த மாத இறுதிக்குள் ஊழியர்கள் மட்டத்திலான உடன்பாடு எட்டப்படும் என்று நம்புவதாக அவர் விளக்கினார்.

நிலுவையில் உள்ள உணவுத் தட்டுப்பாடு காரணமாக, நாட்டில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்குவதாகவும் அவர் விளக்கினார். உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 3 வேளை உணவு வழங்க முடியாத 10% மக்களுக்கு அரசாங்கம் இலவசமாக உணவை வழங்க முடியும் என நம்புவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

நிலைமையின் உண்மையான படத்தை முன்வைக்க அரசாங்கத்திற்கு உதவுமாறு ஊடக உரிமையாளர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். தேவையான போது ஊடகங்கள் அரசாங்கத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அதேவேளை பொறுப்பான அறிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

அரசாங்கத்தின் முன்முயற்சிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, ​​பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சேதத்தின் காரணமாக அதன் விளைவுகளை நாடு அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று பிரதமர் விளக்கினார். எவ்வாறாயினும், நிதி மற்றும் பெளதீக உதவிகளை வழங்குவதன் மூலம் பாதிப்பைக் குறைக்க அரசாங்கம் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் கூறினார். சமூக நலனோம்பலுக்காக 200 பில்லியன் நிதி திரட்டப்படுகிறது எனவும் பிரதமர் தெரிவித்தார் .

ஜப்பானின் நம்பிக்கையை மீட்பதற்கும் அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கும் ஜப்பானுடன் கலந்துரையாடல்கள் நடந்து வருவதாகவும் அவர் விளக்கமளித்தார். உணவு மற்றும் மருத்துவப் பொருட்களில் உதவி செய்வதில் நாடுகள் முன்னேறி வருவதாகவும், எனினும், எந்த நாடும் எரிபொருளை இலவசமாக வழங்க முன்வராது என்றும் பிரதமர் கூறினார்.

இந்த வரவிருக்கும் மாதங்களில் நாட்டுக்கு உதவ ஊடக நிறுவனங்களின் ஆதரவில் தான் தங்கியிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.