தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி தயக்கம்!

0
92
Article Top Ad

காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி கடந்த 2017-ம் ஆண்டு பொறுப்பேற்றார். ஆனால் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் அவர் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அவரை மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வைக்க பல தடவை முயற்சி நடந்தது. என்றாலும் ராகுல் காந்தி பிடிவாதமாக தலைவர் பதவிக்கு வர மறுத்து விட்டார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்ற சோனியா காந்தி தொடர்ந்து கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் அவர் பதவியில் நீடித்து வருகிறார்.

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சிக்கு வலுவான புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று கடந்த 2020-ம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 23 பேர் போர்க்கொடி உயர்த்தினார்கள். காங்கிரஸ் கட்சியை மீண்டும் வலுப்படுத்த வேண்டுமானால் நிர்வாகிகள் அனைவரையும் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் தேர்தல் 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 20-ந்தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை தலைவர் தேர்தலுக்கான எந்த அறிகுறியும் காங்கிரஸ் வட்டாரத்தில் காணப்படவில்லை.

இதனால் காங்கிரஸ் மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் கடும் குழப்பத்துக்கும், தவிப்புக்கும் உள்ளாகி இருக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் பதவியை மீண்டும் ஏற்குமாறு ராகுல் காந்தியிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் ராகுல் எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார். அவர் மீண்டும் தலைவர் பதவியை ஏற்பாரா? என்பது சந்தேகத்துக்குரியதாக இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “ராகுல்தான் மீண்டும் தலைவராக பதவி ஏற்க வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் ராகுல் காந்தி எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக இருக்கிறார். இன்னும் சில தினங்களில் இதற்கு விடை கிடைத்துவிடும்” என்றார்.