டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களை இழுக்க பாஜக பேரம் பேசுவதாக ஆம் ஆத்மி கட்சி தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் இன்று நடந்தது. இதில் மொத்தம் உள்ள ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 62 பேரில் 53 பேர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்காத எம்.எல்.ஏ.க்களை இழுக்க பாரதிய ஜனதா முயற்சி செய்யலாம் என பேசப்படுகிறது. இதனால் டெல்லி அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. நாளை டெல்லி சிறப்பு சட்டசபை கூட்டம் கூட இருக்கிறது. இதில் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.
இந்நிலையில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை வாங்க பாஜக ரூ.800 கோடி ஒதுக்கியிருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு புகார் கூறி உள்ளார். ‘ஆம் ஆத்மி கட்சியின் 40 எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.20 கோடி என ரூ.800 கோடி தந்து டெல்லி அரசை கவிழ்க்க பாஜக சதி செய்து வருகிறது. ரூ.800 கோடி யாருடைய பணம்? அதை அவர்கள் எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை நாடு அறிய வேண்டும். எங்களது எந்த எம்எல்ஏவும் விலை போகவில்லை. அரசு ஸ்திரத்தன்மையுடன் இருக்கிறது. டெல்லியில் நல்ல பணிகள் தொடர்ந்து நடைபெறும்’ என கெஜ்ரிவால் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.