மஹிந்த, கோட்டா, பசிலே பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு

0
71
Article Top Ad

நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்திற்கும், சீரற்ற நிதி நிர்வாகத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர், நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இன்று (14) உயர் நீதிமன்றின் பிரதம நீதியர்சர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம், பெரும்பான்மை அடிப்பையில் இந்த தீர்ப்பை அளித்தது.

அதில் குறித்த மூவருக்கும் மேலதிகமாக, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால், டப்ளியூ.டி. லக்ஷ்மன், நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, முன்னாள் ஜனாதிபதி செயலர் பி.பீ. ஜயசுந்தர மத்திய வங்கியின் நிதிச் சபை ஆகியனவும் இந்த பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு பொறுப்புக் கூற வேண்டும் என உயர் நீதிமன்றின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

எனினும் நீதியரசர் பிரியந்த ஜயவர்தன மட்டும் மனுக்களை நிராகரிக்க வேண்டும் என தனியாக தீர்ப்பறிவித்தார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரி.பி. தெஹிதெனிய, முர்து பெர்ணான்டோ ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்து இவ்வாறு 4:1 எனும் அடிப்படையில் தீர்ப்பை அறிவித்துள்ளது.

அத்துடன் பிரதிவாதிகள் , மனுதாரர்களுக்கு 150000 ரூபாவை வழக்கு கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தர்விட்டுள்ளது.

மூன்று பல்கலைக்கழக புத்திஜீவிகள், இலங்கையைச் சேர்ந்த நீச்சல் வீரரும் பயிற்றுவிப்பாளருமான ஜுலியன் பொல்லிங், இலங்கை வர்த்தகப் பேரவையின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன, ட்ரான்ஸ் பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு மற்றும் ஜெஹான் கனக ரத்ன ஆகியோரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் சீரற்ற நிதி நிர்வாகம் ஆகியவற்றுக்கான முக்கிய பொறுப்பாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அம்மனுக்களில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுக்களில் மொத்தமாக‌ 39 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

மேற்குறிப்பிட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி அத்துலசிறி குமார சமரகோன், புத்திஜீவிகளான சூசையப்பு நேவிஸ் மொறாயஸ் மற்றும் கலாநிதி மஹிம் மென்டிஸ் ஆகியோர் தமது மனுக்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி.ஜயசுந்தர, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால் மற்றும் டபிள்யூ.டி.லக்ஷ்மன், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல உள்ளிட்ட 39 பேரை பிரதிவாதிகளாகப் பெயரிட்டிருந்தனர்.

எனினும் பின்னர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து அவர் பிரதிவாதி பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதிவாதி பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வரிக்குறைப்புக்களே நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைக்குப் பிரதான காரணமென மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக மக்களால் செலுத்தப்படும் வரிகளைக் குறைப்பதற்குத் தன்னிச்சையான தீர்மானத்தை மேற்கொண்டார் என்றும், இத்தீர்மானம் முற்றுமுழுதாக அரசியல் ரீதியான நகர்வென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் கணக்காய்வாளர் நாயகம் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் கொடுக்கல், வாங்கல்களைக் கணக்காய்விற்கு உட்படுத்தி மத்திய வங்கிக்கு ஏற்பட்டிருக்கும் நட்டத்தை மதிப்பீடு செய்யும்படி உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் கோரிக்கைவிடுத்திருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்டோரை பொறுக்குற வேண்டியவர்கள் என அறிவிக்கும் தீர்ப்பை பிரதம நீதியர்சர் ஜயந்த்த ஜயசூரிய, நீதியர்சர்களான முர்து பெர்ணான்டோ, விஜித் மலல்கொட, புவனேக அலுவிஹாரே ஆகியோரின் இணக்கத்துடன் வாசித்தார்.

தனொயாக தீர்ப்பொன்றினை அறிவித்த நீதியரசர் பிரியந்த ஜயவர்தன, தான் குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை நிராகரிப்பதாக அறிவித்தார்.

இந்த மனுக்கள் உரிய சட்ட கால எல்லைக்குள் தாக்கல செய்யப்படவில்லை உள்ளிட்ட சில காரணிகளை மையபப்டுத்தி மனுக்களை நிராகரிக்கும் தீர்மானத்தை அறிவிப்பதாக அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

பெரும்பான்மை நீதியசர்களின் தீர்ப்பை அறிவித்த பிரதம நீதியசர் ஜயந்த ஜயசூரிய, 2019 நவம்பர் மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் பொறுப்புக் கூற வேண்டிய பிரதிவாதிகள், முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த காலப்பகுதியில் நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்படும் என்பதை இந்த பிரதிவாதிகள் விளங்கிக்கொண்டிருந்தமை தெளிவாகுதாகவும், அப்படி இருந்தும் அந்த நிலைமையை சீர் செய்ய அவர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்படும் என சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பொருளாதார நிபுணர்கள் எச்சரித்தும், பிரதிவாதிகள் அவற்றை செவிமடுத்து செயற்பட்டதாக தெரியவில்லை எனவும் பொருளாதார நெருக்கடியை தடுக்க தாம் அனைத்து முயற்சிகளையும் செய்ததாக பிரதிவாதிகள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அந்த தீர்ப்பில் பிரதம நீதியரசர் சுட்டிக்காட்டினார்.

இதனூடாக பிரதிவாதிகள் பொதுமக்களின் நம்பிக்கை, பொறுப்பினை மீறி செயற்பட்டுள்ளதாகவும் அது அரசியலமைப்பின் ஊடாக உறுதி செய்யப்ப்ட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகவும் அத்தீர்ப்பில் பிரதம நீதியரசர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் இவ்வாறு அடிப்படை உரிமை மீறப்பட்டமை தொடர்பில் நட்ட ஈடுச் செலுத்த உத்தர்வு பிறப்பிப்பதில்லை என சுட்டிக்காட்டிய பிரதம நீதியர்சர் பிரதிவாதிகள் மனுதாரர்களுக்கு தலா 150000 ரூபா வீதம் வழக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்தார்.

இம்மனுவில் மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் ஜயசூரிய , சந்தக ஜயசூரிய மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி விஷ்வக பீரிஸ் ஆகியோர் ஆஜராகினர்.

நாணய சபை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா பிரசன்னமானார். பிரதிவாதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகையோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன ஜனாதிபதி சட்டத்தரணி நவீன் மாரப்பனவுடன் ஆஜரானார்.

ஏனைய பிரதிவாதிகளுக்காக ஜனாதிபதி சட்டத்தரணிகளான சவேந்ர பெர்ணான்டோ, அனுர மெத்தேகொட, நிஹால் ஜயவர்தன உள்ளிட்டோர் ஆஜரானதுடன் சில பிரதிவாதிகளுக்காக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே ஆஜரானார்.