கனவுகள் கலைந்தன: டி20 உலகக் கிண்ணத்தில் உத்தியோகப்பூர்வமாக வெளியேறிய இலங்கை!

0
57
Article Top Ad

2024 ஐசிசி டி20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியானது உத்தியோகப்பூர்வமாக வெளியேற்றப்பட்டுள்ளது.

வியாழன் (ஜூன் 13) அன்று செயின்ட் வின்சென்ட்டில் பங்களாதேஷ் நெதர்லாந்தை 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததால் முன்னாள் சாம்பியன்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது.

குழு Dயில் பங்களாதேஷ் நான்கு புள்ளிகளை எட்டிய இந்த வெற்றியின் அர்த்தம், இலங்கை இனி முதல் மூன்று இடங்களுக்குள் வர முடியாது போனதாகும்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இலங்கை அணியின் 2024 டி20 உலகக் கிண்ண பயணம் ஒரு சோகமான ஆரம்பத்துடன் தொடங்கியது. அந்தப் போட்டியில் அவர்கள் 77 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர்.

பின்னர், பங்களாதேஷுடனான ஒரு குறுகிய தோல்வியும், நேபாளத்துடனான போட்டி மழையால் பாதிக்கப்பட்டமையும் இலங்கையின் 2024 உலகக் கிண்ண ஆசையை தோல்வியின் விளிம்புக்கே கொண்டு சேர்த்தது.

தற்போது வெறும் 1 புள்ளி மற்றும் நிகர ரன் ரேட் -0.777 உடன் குழு Dயில் இறுதி இடத்தில் இருக்கும் இலங்கை அணி, இறுதியாக ஆறுதல் போட்டியாக ஜூன் 16 அன்று நெதர்லாந்தை எதிர்கொள்ள காத்திருக்கிறது.

அந்த போட்டியின் பின்னர் அவர்கள் நாடு திரும்ப வேண்டிய துர்ப்பாக்கியத்துக்கு முகங்கொடுத்துள்ளனர். இது அவர்களுக்கான ஏமாற்றம் மட்டுமல்லாது எத்தனை தோல்விகளை தழுவினாலும், இலங்கை அணியுடன் எப்போதும் துணை நிற்கும் அவர்களின் ரசிகர்களுக்கான பெரிய அடியும் தான்.

அதேநேரம், நெதர்லாந்துடனான பங்களாதேஷின் வெற்றியானது சுப்பர் 8 சுற்றுக்கு நுழைவதற்கான அவர்களின் வாய்ப்பினை இலகு படுத்தியுள்ளது. அவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேற அவர்களுக்கு இன்னும் ஒரு புள்ளி மாத்திரமே தேவை.

ஜூன் 16 இடம்பெறும் போட்டியில் பங்களாதேஷ் நேபாளத்துடன் மோதும்.

குழு Dயில் தென்னாப்பிரிக்கா மாத்திரம் இதுவரை சுப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.