புலிகளுக்கு பிரித்தானியாவில் தொடரும் தடை – இலங்கை பாராட்டு

0
28
Article Top Ad

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர ஐக்கிய இராச்சியம் (பிரித்தானியா) எடுத்த முடிவை இலங்கை பாராட்டியுள்ளது.

இது குறித்த அறிவிப்பை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த கோரிக்கையை பிரித்தானியா தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையம் நிராகரித்துள்ளதாக” அமைச்சர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானியா தொடர்ந்து கடைப்பிடிக்கும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தனி தமிழீழ அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு பிரித்தானியாவிடம் கோரியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

“நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரித்தானியாவில் தடைசெய்யப்படவில்லை.

ஏனெனில் அது வன்முறையற்ற வழிமுறைகளின் மூலம் அவர்களின் அரசியல் மற்றும் கருத்தியல் நோக்கங்களைத் தொடர முயல்கிறது” என்று அமைச்சர் தன பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் வெளிநாட்டு அரசாங்கங்களை புலிகள் குறித்து விவரிக்க வைப்பதே புலிகளின் சர்வதேச வலையமைப்பின் அணுகுமுறை என வெளிவிவகார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.