பிரித்தானியப் பொதுத் தேர்தல் : 14 வருட ஆட்சி முடிவுக்கு வருமா?

0
28
Article Top Ad

பிரித்தானிய பொதுத் தேர்தல் நாளை (04) ஆரம்பமாகவுள்ள நிலையில் புலம்பெயர்ந்த வாக்காளர்களும் வாக்களிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிலிருந்து நைஜீரியா, இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு ஏதிலிகளாக புலம்பெயர்ந்தவர்களும் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பொதுத் தேர்தல் நாளை நடத்தப்படும் என அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் அண்மையில் அறிவித்திருந்த நிலையில் கடந்த மே 30ஆம் திகதி பிரித்தானிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உரிய காலத்திற்கு முன்னதாகவே தேர்தலை நடத்தும் பிரித்தானிய பிரதமரின் தீர்மானத்திற்கு கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் கடந்த மே 24ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது.

பொதுத் தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளின்படி ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி 21 சதவீத ஆதரவு வாக்குகளை மாத்திரமே பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டின் சமூக ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இதேவேளை எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்தால் முதல் 100 நாட்களில் பிரித்தானியா மீளமுடியாதொரு நெருக்கடிக்குள் தள்ளப்படும் என அந் நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்ததும் வரி அதிகரிக்கும் என்றும் சட்டவிரோதமான முறையில் புலம்பெயர்ந்தோர் மீண்டும் பிரித்தானியாவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

நாளை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வியைச் சந்திக்க நேரிடும் என வெளியான கருத்துக்களைத் தொடர்ந்து ரிஷி சுனக் தொழிலாளர் கட்சியை இவ்வாறு விமர்சித்துள்ளார்.

இதேவேளை 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சிக்குப் பதிலாக எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி குறித்த தேர்தலில் அமோக வெற்றியைப் பெறும் எனப் பரவலாக பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.