வெளிநாட்டு ஆய்வு கப்பல்களுக்கான தடையை நீக்கவுள்ள இலங்கை: அமெரிக்கா மற்றும் இந்தியாவின் முடிவு என்ன?

0
30
Article Top Ad

வெளிநாட்டு கப்பல்களுக்கான தடையை நீக்கவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய அடுத்தாண்டு முதல் தடையை விலக்கிக்கொள்ள இலங்கை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தற்போது ஜப்பானுக்கு அலி சப்ரி விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இலங்கைக்கு சோளார் வசதியுடன் கூடிய கப்பலை வழங்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து அலி சப்ரி அளித்த பேட்டியில் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறான விதிமுறைகளை இலங்கையால் பின்பற்ற முடியாது. அடுத்த நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகளில் நாங்கள் தலையிட மாட்டோம்.

ஆகவே அடுத்தாண்டு ஜனவரி முதல் வெளிநாட்டு ஆய்வு கப்பல்கள் இலங்கை வந்து செல்ல தடைவிதிக்கப்படாது என அலி சப்ரி கூறினார்.

கடந்த காலங்களில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன ஆய்வுக் கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்திருந்தது. அவ்வாறான நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு சீனாவின் ஆய்வுகப்பல் யான் வாங் 5 இலங்கையில் உள்ள ஹம்பந்தோட்ட துறைமுகத்தில் தரித்து நின்று சென்றது.

மேலும் 2023 ஆம் ஆண்டில் சீனாவின் யான் வாங் 6 ஆய்வு கப்பல் இலங்கை வந்து சென்றது. இது குறித்து அமெரிக்கா, இந்தியா ஆகியவை இலங்கையிடம் கவலை தெரிவித்திருந்தன.

அந்த கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில் நின்று சென்றால், இந்தியாவை உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என இலங்கையிடம் இந்தியா கவலை தெரிவித்தது.

அதேவேளை, இலங்கை அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்ததால் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளில் இருந்து கடனுதவி பெற்றது.

இதனால் இலங்கைக்கு இரு நாடுகளும் முக்கியம். ஆகவே வெளிநாட்டு ஆய்வு கப்பல்கள் இலங்கை துறைமுகத்தை பயன்படுத்துவதற்கு கடந்த ஜனவரி மாதம் தடைவிதிக்கப்பட்டது.

ஆனால் சீன கப்பலுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து இலங்கை அனுமதி அளித்தது. எனினும் மற்ற நாடுகளின் கப்பல்களுக்கு இந்த தடை தொடரும் என அறிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.