கடுமையான நெருக்கடிகள் இலங்கையில் ஏற்படும் அபாயம் – ரணில் என்ன செய்வார்?

0
101
Article Top Ad

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்காத பட்சத்தில் அன்றைய தினம் இரவே நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்வது ஜனாதிபதிக்கு சவாலாக உள்ளதால் மற்றுமொரு வாய்ப்பாக நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதை இடைநிறுத்துமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதால் ரணில் விக்ரமசிங்கவுக்கும் விஜேதாச ராஜபக்சவுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் முற்றியுள்ளன.

இந்நிலைமையால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத்தேர்தல் வரக்கூடிய சாத்தியம் அதிகமாக இருப்பதாகவும் சமகால அரசியல் நிலைமைகள் வேறு திசையை நோக்கி பயணிக்கும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்கள் அடுத்துவரும் வாரங்களில் இலங்கையில் பாரிய அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு தொடர்ச்சியாக பல அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துவரும் பின்புலத்தில் நேற்றைய அவரது செயல்பாடு ஜனாதிபதியை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு காப்பந்து அரசாங்கமொன்றை அமைத்து 22ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற ரணில் விக்ரமசிங்க முற்படலாம் என அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், மக்கள் ஆணையால் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படாத ரணில் விக்ரமசிங்கவால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாதென சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு அரசியல் நெருக்கடிகளை சமகால அரசாங்கமும் ஜனாதிபதியும் எதிர்கொண்டுள்ளதால் அடுத்த மூன்று வாரங்கள் இலங்கை அரசியலில் கடும் நெருக்கடியான காலகட்டமாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

என்றாலும், ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அவர், 22ஆவது திருத்தச்சட்டத்தை வர்த்தமானியில் அறிவிக்க முடியும். அவ்வாறு அறிவிக்க முற்பட்டதால் ரணில் விக்ரமசிங்க கடுமையான ஒரு சர்வாதிகாரியாக மாற வேண்டும்.
22ஆவது திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு தோல்வியடைந்தால் ஜனாதிபதியின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்துக்கு அதிகரிக்கும். வெற்றியடைந்தால் சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும்.

ஜனநாயகம், நல்லாட்சி பற்றி உலகம் முழுவதும் அறிவுறைகளை கூறிய ரணில் விக்ரமசிங்க தமது அதிகாரத்தை தக்கவைக்க சர்வாதிகாரியாக மாற முற்பட்டால் இலங்கை கடுமையான அரசியல் எதிர்கொள்ளும் சூழ்நிலைக்குத் தள்ளப்படலாம். அதேபோன்று ரணில் விக்ரமசிங்கவும் அரசியல் பொறிக்குள் சிக்குபடலாம்.

திருத்தச்சட்டம் வெற்றிபெற்றாலும் தோல்வியடைந்தாலும் ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலம் அதிகரிக்கம் என்பதால் அவர் கடுமையான முயற்சிகளை இந்த விடயத்தில் எடுப்பது உறுதியாகியுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி மற்றும் இலங்கைக்கான கடன் வழங்குநர்களுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள அனைத்து உடன்பாடுகளும் அனைத்தும் ஜனநாயகம் மற்றும் முறையான பொருளாதார முகாமைத்துவத்தை மையப்படுத்தியதாகும்.

ஜனாதிபதித் தேர்தலை பிற்போடும் முயற்சிகளை ரணில் எடுத்தால் கட்டாயம் கடுமையான அரசியல் நெருக்கடிகளை உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் ரணில் எதிர்கொள்ள நேரிடும். இது இலங்கையின் தற்போதைய பொருளாதார ஸ்திர தன்மையை தலைகீழாக மாற்றிவிடும்.

அரசியலமைப்பில் உள்ள பல்வேறு ஓட்டைகளை பயன்படுத்தி சமகால அரசாங்கம் தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள எடுக்கும் முயற்சிகள் அனைத்து நாட்டில் குழப்பகரமான சூழ்நிலைகளுக்கே வழிவகுக்கும்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் இதுவரை உறுதியான இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை.

பொதுஜன பெரமுனவின் முன்மொழிவுகளுக்கு ரணிலின் உறுதிமொழிகள் போதுமானதாக இல்லை என்பதால் அக்கட்சி தனியான வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

அடுத்த இரு வாரங்களில் இருதரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடுகள் எட்டப்படாவிடின் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவது உறுதியென அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.