2005 இல் எடுத்த தவறான முடிவை தமிழர்கள் இம்முறை சரி செய்வர்

0
14
Article Top Ad

“2005 ஆம் ஆண்டு இழைத்த தவறை வடக்கு, கிழக்கு மக்கள் மீண்டும் இழைக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அன்று ஜனாதிபதித் தேர்தலை அம்மக்கள் புறக்கணித்தால்தான் ரணில் விக்கிரமசிங்க தோற்றார்.” – என்று முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“1950 களில் பண்டாரநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு வெளியேறினார். ஆனால், கட்சி பலவீனமடையவில்லை. 1991 இல் லலித் மற்றும் காமினி திஸாநாயக்க ஆகியோர் ஐ.தே.கவைவிட்டு வெளியேறி புதிய கட்சியை ஸ்தாபித்தனர்.

அப்போதும் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவைச் சந்திக்கவில்லை.எனினும், சஜித் பிரேமதாஸ தலைமையில் நாம் வெளியேறிய பின்னரே கட்சி பிளவைச் சந்தித்தது. அவ்வாறானதொரு முடிவை எடுத்திருக்கக்கூடாது என்று தற்போது தோன்றுகின்றது. பிரதான கட்சியை உடைத்துவிட்டோமே என்ற மனக்கவலை இன்னும் உள்ளது.

1994 ஜனாதிபதி தேர்தலின்போது காமினி திஸாநாயக்க படுகொலை செய்யப்பட்டார். அதனால் கட்சி தோற்றது. பின்னர் 1999 ஜனாதிபதித் தேர்தலில் கடைசி பிரசாரக் கூட்டத்தின்போது சந்திரிகா குண்டு தாக்குதலுக்கு இலக்காகிக் கண்ணை இழந்தார். இறுதியில் அனுதாப வாக்குகளால் வெற்றி பெற்றார்.

2005 இல் ராஜபக்ஷ குழுவின் சூழ்ச்சிக்குள் சிக்கி அப்பாவி வடக்கு, கிழக்கு மக்களின் வாக்குகளைப் புறக்கணிக்கச் செய்தனர். இதனால் ரணில் தோற்றார். வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களித்திருந்தால் ரணில் அன்று நிச்சயம் ஜனாதிபதியாகி இருப்பார்.

எனவே, ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்ட இரு தடவைகளிலும் அவர் இயல்பாகவே தோல்வியைச் சந்திக்கவில்லை. அதற்கான சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

எனினும், 2005 இற்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மக்கள் தமது வாக்குகளை எமது முகாமுக்கே வழங்கி வருகின்றனர். எனினும், தற்போது சஜித்தும், ரணிலும் பிரிந்து நிற்பதால் எவருக்கு வாக்களிப்பது என்ற பிரச்சினை உருவாகியுள்ளது. இதன் உண்மைத்தன்மை செப்டெம்பர் 22 ஆம் திகதியே தெரியவரும்.” – என்றார்.