மக்களை முட்டாளாக்கும் அநுரவின் விஞ்ஞாபம் – விளாசித் தள்ளிய ரணில்

0
9
Article Top Ad

“மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறி தேசிய மக்கள் சக்தி நாட்டை ஏமாற்றிய போதிலும், அவர்களின் 232 பக்க விஞ்ஞாபனத்தில் மாற்றம் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. அது வெற்று மாற்றம். ஒட்டுமொத்தத்தில் அநுரவின் தேர்தல் விஞ்ஞாபம் மக்களை முட்டாளாக்குகின்றது.”

– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

டி.எஸ். சேனநாயக்கவும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவும் இணைந்து நாட்டின் சுதந்திரத்துக்காக ஸ்தாபித்த ஐக்கிய தேசியக் கட்சி, நாட்டின் பொருளாதார சுதந்திரத்துக்காக அனைவரையும் ஒன்றிணைத்து மீண்டும் பங்காற்ற ஆரம்பித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டுக்காக ஒன்றுபடுகையில் கோஷமிடும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்த ஜனாதிபதி, ஜீ.எல். பீரிஸ், நாலக கொடஹேவா மற்றும் டலஸ் அழகப்பெரும போன்றோருக்கு முன்னுரிமை அளிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியில் ஐக்கிய தேசியக் கட்சி கொள்கை எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

மொரவக்க பிரதேசத்தில் நேற்று (06) வெள்ளிக்கிழமை நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதுடன் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

“அரசு தற்போது முன்னெடுக்கும் ஏற்றுமதி பொருளாதாரத்தை தாமும் முன்னெடுப்பதாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவிக்கையில் இறக்குமதி பொருளாதாரத்தை மேற்கொள்ள வேண்டும் எனச் சுனில் ஹந்துன்நெத்தி கூறுகின்றார். இந்த முரண்பாடான கருத்துக்களை தேசிய மக்கள் சக்தி நாட்டுக்கு விளக்கமளிக்க வேண்டும்.” – என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

“இன்று எனக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முக்கியமான நாள். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் சுதந்திரத்துக்காக ஒன்றுபட்டனர். பின்னர் பிரிந்து செயற்பட்டனர். அதேபோல் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆபத்து வந்திருக்கும் வேளையில் நாம் ஒன்றுபட்டிருக்கின்றோம்.

இன்று சிலர் கட்சியை விட்டு ஓடிவிட்டு நாங்கள் ஒன்றிணைந்திருப்பதைப் பற்றி பேசுகிறார்கள். நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் வேளையில் நாட்டை மீட்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையாகும். ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை. ஜீ.எல்.பீரிஸ், நாலக கொடஹேவா, டலஸ் அலகப்பெரும போன்றவர்களைப் பலப்படுத்தும் கட்சியினரை எவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியினர் என்று சொல்லிக்கொள்ள முடியும்?

ஐக்கிய தேசியக் கட்சி என்ற வகையில் கட்சியின் முன்னாள் தலைவர்களும் நாமும் உண்மையை மட்டுமே மக்களுக்குச் சொல்வோம். கடந்த தேர்தல் காலத்திலும் நான் இந்த நாடு வங்குரோத்து அடையப்போகிறது என்ற உண்மையை முன்கூட்டியே மக்களுக்குச் சொன்னேன்.

நாடு நெருக்கடியிலிருந்து மீள 60 கோடி அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்பதையும் சொன்னேன். எம்மிடம் திட்டம் ஒன்றுமில்லை என்று எதிர்த்தரப்பினர் அன்று விமர்ச்சித்தனர். அதனால் நாம் தோற்றுப்போனோம்.

அப்போது சிலர் உண்மை கூறித் தோற்பதற்குப் பதிலாக பொய் சொல்லி வென்றிருக்கலாம் என்று கூறினார்கள். ஆனால், எமது கொள்கையில் மாற்றமில்லை. எவ்வாறாயினும் நாம் அன்று கூறியவாறு நாட்டின் எதிர்கால பயணத்துக்கு தேவையான நிதியை தேடிக்கொண்டிருக்கின்றோம். ஐ.எம்.எப். மற்றும் கடன் வழங்கிய 18 நாடுகளின் உதவியுடன் 16 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தேடிக்கொண்டுள்ளோம்.

தற்போது ஐ.எம்.எப். எமக்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதனால் மக்களுக்குச் சேவை செய்வதற்கு வருமானத்தை அதிகரிக்க வேண்டியிருந்தது. அதற்காகவே விருப்பம் இல்லாமலேனும் வற் வரியை அதிகரித்தோம். அதனைச் செய்ததாலேயே நாட்டில் பணவீக்கம் குறைந்து ரூபாவின் பெறுமதி அதிகரித்து. அதன் பலனாக பொருளாதாரம் நிலைதன்மையை அடைந்தது. இன்று முன்னோக்கிச் செல்கின்றோம்.

அதேபோல் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினோம். நிவாரணம் பெறும் பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளோம். சமுர்த்தி போன்று மூன்று மடங்கு நிவாரணம் இன்று கிடைக்கின்றது. பின்னர் உறுமய திட்டத்தில் காணி உறுதிகயை வழங்குகின்றோம். அரச ஊழியர்களுக்குச் சம்பளம், வாழ்வாதாரக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டது. அடுத்த வருடத்துக்கான சம்பள அதிகரிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. உரத் தட்டுப்பாட்டையும் போக்கினோம்.

அதனால் பல பொருட்களின் விலைகள் குறைந்தன. சில பொருட்களின் விலைகள் 10 சதவீதத்தால் குறைந்துள்ளதோடு சில பொருட்களின் விலகள் 40 சதவீதம் வரையில் குறைந்தன. எவ்வாறாயினும் இன்னும் ஐந்து வருடங்களுக்கு சரியான பாதையில் பொருளாதாரத்தை கொண்டுச் செல்வதற்கான திட்டத்தை முன்மொழிந்திருக்கின்றோம்.

ஐந்து அம்சங்களின் கீழ் அந்த திட்டத்தைச் செயற்படுத்தவிருக்கின்றோம். இன்று ரூபாவின் பெறுமதி குறைந்துள்ளது. ஆனால், அது போதுமானதல்ல. இருப்பினும் நாட்டில் நிலைத்தன்மை உருவாகியுள்ளது. வாழ்வாதாரச் செலவும் குறைந்துள்ளது.

இன்னும் பல நிவாரணம் மக்களுக்கு கிடைக்கும். எதிர்க்கட்சிகள் வரி குறைப்பு பற்றி பேசுகின்றனர். அதே வழியில் சென்றதாலேயே கோட்டாபய ஆட்சி சரிந்தது. நாம் செல்லும் வேகம் குறைவாக இருக்கலாம். ஆனால், எமது பயணம் வலுவான பயணமாக இருக்கும்.

இன்று கஷ்டங்களுக்கு மத்தியிலாவது வாழக்கூடிய நிலைமை உள்ளது. அதேபோல் இந்த நாட்டு பெண்களின் உரிமைகளை ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். பெண்களுக்குத் தனியானதொரு பகுதியைத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருக்கின்றோம். பெண்களை வலுவூட்டும் சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளோம். அதனால் பெண்களின் உரிமைகள் எல்லா இடங்களிலும் பாதுகாக்கப்படும்.

பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கான திட்டங்களையும் குறிப்பிட்டுள்ளோம். சுய தொழில் செய்வோருக்கும் நிதி நிவாரணங்களை வழங்குவோம். தனியார் துறையிலும் அரச துறையிலும் பயிற்சி பெறுவதற்கும் நிதி உதவிகளை வழங்குவோம்.

சஜித்துக்கோ அநுரவுக்கோ இந்தத் திட்டங்கள் இல்லை. தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் திட்டங்கள் எம்மிடம் உள்ளன. விவசாய நவீன மயப்படுத்தல் முயற்சிகளை ஆரம்பிக்கவுள்ளோம். உலக உணவுத் தேவையை இலக்கு வைத்து உணவு உற்பத்தியை மேற்கொள்ள வழிகாட்டுவோம்.

தேயிலை வளர்ப்பு, தேயிலை மீள் வளர்ப்புக்கான நிதி உதவிகளும் வழங்குவோம். கருவா, கோப்பி போன்ற உற்பத்திக்கும் புதிய ஏற்றுமதிக்கான பொருட்களை விளைவிக்கும் அனைவருக்கும் சலுகை வழங்குவோம். அடுத்த வருடத்திலிருந்து நிவாரணங்கள் கிடைக்கும். மேலும் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க பலப்படுத்தவும் அர்ப்பணிக்கவும் வேண்டும்.

டிஜிட்டல் பொருளாதாரம், முதலீட்டு வலயங்கள் என்பவற்றை உருவாக்குவோம். அதனால் வௌிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வருவோம். இவ்வாறிருக்க என்று அநுரகுமார திஸாநாயக்கவும் ஏற்றுமதி பொருளாதாரம் பற்றிப் பேசுகின்றார். எமது கொள்கையை அவரும் பின்பற்றுவதை வரவேற்கின்றோம்.

ஆனால், மறுமுனையில் நான் பொருளாதார பரிமாற்றச் சட்டமூலத்தை சமர்ப்பிக்கும்போது சுனில் ஹந்துன்நெத்தி போன்றவர்கள் அதற்கு எதிராக வழக்குத் தொடுத்தனர். அதனால் அநுரகுமார சொல்லும் விடயங்களுக்கு முரனாணதாகவே ஹந்துன்நெத்தியின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. அதேபோல் உள்நாட்டு வௌிநாட்டு முதலீட்டாளர்களை புறக்கணிக்கும் வகையிலான கொள்கைகளை குறிப்பிட்டுள்ளனர். அது பற்றி நாட்டு மக்களுக்கு தௌிவுபடுத்த வேண்டும். இன்று திசைக்காட்டி எந்தப் பக்கம் சுற்றுகிறது என்பது அவர்களுக்கு புரியவில்லை.

இன்று நாட்டில் மாற்றம் செய்யப் போவதாகக் கூறுகின்றார்கள். ஆனால், அதற்கான எந்த விடயங்களும் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லை. ஆனால், நாம் பல்வேறு மாற்றங்களைச் செயலில் காட்டியிருக்கின்றோம். ஜனசபா, இளையோர் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல மாற்றங்களைச் செய்தோம். ஊழல் எதிர்ப்புக்கான தெற்காசியாவின் வலுவான சட்டத்தை நிறைவேற்றியிருக்கின்றோம்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது நாம் செய்து காட்டுகின்றோம். எனவே, அநுரகுமார திஸாநாயக்க எமது கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். இயலும் ஸ்ரீலங்கா நாட்டின் முன்னேற்றத்துக்கான திட்டம். நெருக்கடியின்போது முடியாது என்று ஓடியவர்களோ இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. எனவே, சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here