அநுர அரசாங்கத்தின் மற்றுமொரு அதிரடி – இராஜதந்திர கடவுச்சீட்டை பயன்படுத்த முடியாது

0
28
Article Top Ad

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவானது முதல் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.

அத்துடன், ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் அரச நிறுவனங்கள், திணைக்களம் மற்றும் அரச அதிகாரிகளும் சில தீர்மானங்களை அறிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் அனைத்து முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட இராஜதந்திர கடவுச்சீட்டுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர குடிவரவு குடியகல்வு திணைக்கள தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.

வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் சாதாரண கடவுச்சீட்டைப் பெற வேண்டுமெனவும் அவர் அறிவித்துள்ளார்.

அத்துடன், கடவுச்சீட்டுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரசியலமைப்பு பேரவையிலுள்ள சபாநாயகர், பிரதி சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதன் மூன்று உறுப்பினர்களைத் தவிர 219 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் இராஜதந்திர கடவுச்சீட்டுகள் இரத்துச் செய்யப்படுள்ளன.

முன்னாள் அமைச்சர்களின் இராஜதந்திர கடவுச்சீட்டுகள் இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களம், கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அவர்களது மனைவிகள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் இந்த இராஜதந்திர கடவுச்சீட்டு சலுகைகள் உண்டு.