ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நான்கு நாள் அரசுமுறை பயணமாக நேற்று 14ஆம் திகதி சீனாவுக்குச் சென்றார்.
சர்வதேச ரீதியில் உற்றுநோக்கம் பயணமாக இது அமைந்ததுடன், சீனாவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அளிக்கப்பட்ட செங்கம்பள வரவேற்பு புதுடில்லி வழங்கிய வரவேற்பை காட்டிலும் பிரமாண்டமாக இருந்தது.
தேசிய மக்கள் சக்தி இந்தியாவை பகைத்துக் கொள்ளாது சீனாவையும் அனுசரித்து போகும் கொள்கையுடன் பயணிக்கிறது என்பதுடன், தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளும் தீர்மானங்களும் சீன அரசியல் பாணியை ஒத்தது என்ற கருத்து பரவலாக உள்ளது.
அவர்களுடைய சித்தாந்தங்கள் அனைத்தும் கம்யூனிசத்தை மையப்படுத்தியதாக இருந்தமையால் தேசிய மக்கள் சக்தி எனப்படும் ஜே.வி.பியின் ஆட்சி இலங்கையில் மலர்ந்தால் சீனாவின் கை ஓங்கும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருதினர்.
ஆனால், ஜனாதிபதி அநுரகுமார தமது இந்திய பயணத்தின் போது தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்பு விடயத்தில் இந்தியாவுக்கே முன்னுரிமை என்ற வாக்குறுதியை பிரதமர் மோடியிடம் வழங்கியிருந்தார்.
இந்தப் பின்புலத்தில் சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் (Xi Jinping) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (15) பிற்பகல் சீன மக்கள் மண்டபத்தில் நடைபெற்றது.
சீன மக்கள் மண்டபத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அமோக வரவேற்பளித்தார், மரியாதை வேட்டுக்களுடன் மிகுந்த கௌரவமான முறையில் வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து இருதரப்பு அரச தலைவர்களுக்கும் இடையில் சுமூகமான கலந்துரையாடல் நடைபெற்றதோடு அடுத்து இரு தரப்பு கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டன.
அபிவிருத்தியின் புதிய யுகத்திற்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி இதன் போது வலியுறுத்தினார்.
அத்தோடு நெருங்கிய நட்பு நாடுகள் என்ற வகையில் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவுகூர்ந்த சீன ஜனாதிபதி சீ ஜிங்பிங் , எதிர்காலத்தில் இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார, சமூக மற்றும் கைத்தொழில்துறை சார்ந்த பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
இந்த சந்திப்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் அரச தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே. ஜே. பண்டார ஆகியோரும் பங்கேற்றனர்.
ஜனாதிபதியின் இந்தப் பயணம் நிறைவடைந்ததும் பயணம் தொடர்பிலான விடயங்கள் மற்றும் ஏற்படுத்திக்கொண்ட அரசியல் உடன்பாடுகள் குறித்து சர்வதேச ரீதியில் பேசுபொருளாகும் என சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.