பத்திரிகைத்துறையின் மூத்த ஆசிரியர் பாரதி…..!

0
17
Article Top Ad

அண்ணன் பாரதி, ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை உரக்கப் பேசப்பட்ட காலத்தில் ஊடகத்துறைக்குள் கால்பதித்தவர். குறிப்பாக, கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய கல்லோயா குடியேற்றத் திட்டத்தின் உள் நோக்கங்களை தொடர் கட்டுரையாக எழுதியதன் மூலம் பத்திரிகைத் துறைக்குள் பிரகாசிக்க ஆரம்பித்தார்.

1949 இல் ஆரம்பிக்கப்பட்ட கல்லோயோக் குடியேற்றத் திட்டத்தின் நீட்சி 2009 இற்குப் பின்னரான சூழலிலும் அதாவது, இன்றைய அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சியிலும் தொடரும் என்பதற்குரிய காரண – காரியங்கள் பலமாகத் தென்படுகின்றன.

இது பற்றி பாரதி அண்ணன் அக் கட்டுரையில் அன்றே எச்சரித்திருந்தார். அதாவது, வடக்குக் கிழக்கில் தொடரப் போகும் சிங்களக் குடியேற்றங்கள் பற்றிய அவருடைய எச்சரிக்கை இன்று வரை எந்தவித மாற்றங்களும் இன்றி தொடருவதை நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கும் சூழலில் அவர் யாழ்ப்பாணத்தில் இயற்கை மரணமடைந்துள்ளார்.

1984 இல் யாழ் ஈழமுரசுப் பத்திரிகையில் தனது பத்திரிகைத்துறைப் பணியை ஆரம்பித்த பாரதி, பின்னர் முரசொலி பத்திரிகையில் பணியாற்றினார். அமைதிப் படை என்ற பெயரில் வடக்குக் கிழக்கில் தரையிறக்கப்பட்ட இந்திய இராணுவத்தின் கொடுமைகள் பற்றி பாரதி அன்று செய்தியாகவும் செய்தி விமர்சனமாகவும் எழுதியிருந்தார்.

ஈழத்தமிழர் அரசியல் போராட்ட வரலாற்றை தொடராக எழுதிய பாரதி, ஜனநாயக வழியில் சாத்தியப்படக் கூடியதை, இலங்கை ஒற்றை ஆட்சி அரசு இராணுவ கண்ணோட்டத்தில் பார்ப்பதன் ஆபத்துக்களையும் விமர்சித்திருந்தார்.

அக் காலகட்டத்தில் அதாவது, 1989 இல் முரசொலி ஆசிரியர் திருச்செல்வத்தின் மகன் அகிலன் இந்திய இராணுவத்தின் துணையுடன் இயங்கிய ஆயுதக் குழுவினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  அத் துயரங்களையும் அக்கால அரசியல் அவலங்களையும் செய்தியாக எழுதிக் கொண்டிருந்த பாரதி, யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து கொழும்பில் வாழ்ந்தபோது வீரகேசரி தேசிய நாளிதழில் தனது பத்திரிகைப் பணியை தொடர்ந்தார்.

இந்திய இராணுவத்தின் காலத்தில் இயங்கிய தமிழ் ஆயுதக் குழுக்களின் படுகொலைகளுக்கு மத்தியில் மறைந்திருந்து செயற்பட்ட விடுதலைப் புலிப் போராளிகளுடன் தொடர்புகொண்டு அரசியல் ரீதியான தெளிபடுத்தல்களை பாரதி அண்ணன் அன்று மேற்கொண்டிருந்தார்.

துணிகரமான இச் செயற்பாடுகள் பற்றி பாரதி தான் மரணிக்கும்வரை எந்தவொரு இடத்திலும் மார் தட்டித் தனக்குப் பெருமை சேர்க்கவில்லை. ஏனெனில், அது பொறுப்புள்ள தமிழ்ப் பத்திரிகையாளனின் பணி என்றுதான் அவர் சொல்வார்.

கொழும்பில் வீரகேசரியில் பணியாற்றியபோது அதன் தொடர்ச்சியை அவரால் தொடர்ந்து எழுத முடியவில்லை. ஆனாலும், இந்திய அரசின் நோக்கங்கள் அதற்குத் துணைபோன தமிழ்த் தேசியக் கட்சிகளின் போக்குகள் பற்றி அவர் தனது அரசியல் பத்தி எழுத்துக்களில் அவ்வப்போது சாடியிருக்கிறார், சுட்டிக்காட்டியிருக்கிறார்.

1997 இல் தினக்குரல் பத்திரிகை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டபோது மூத்த பத்திரிகையாளர் அமரர் இராஜகோபால் மற்றும் வீ.தனபாலசிங்கம் ஆகியோருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தினக்குரல் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவர் என்ற பெருமைக்குரியவரானார்.

1998 இல் கொழும்பில் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஸ்தாபக உறுப்பினராக இருந்த பாரதி, இலங்கையில் ஜனநாயகமும் பன்மைத் தன்மையும் கொண்ட ஊடகக் கலாசாரத்திற்கான மற்றும் பத்திரிகைத் துறை பற்றிய தொழில் உரிமைகளுக்கான சாசனத்தில் கையொப்பமிட்டார்.

2005 கையொப்பமிட்ட பின்னர் கருத்துரைத்த பாரதி, ஈழத்தமிழ் அச்சு ஊடகங்கள் 1981 இல் அதாவது, யாழ் ஈழநாடு எரிக்கப்பட்டபோது கொழும்பில் இருந்த சிங்கள பத்திரிகையாளர்கள் பலர் அமைதியாக இருந்ததைச் சுட்டிக்காட்டினார்.

இலங்கைத்தீவில் அப்போது பத்திரிகைத் தொழிற் சங்கங்கள் பெரியளவில் வளர்ச்சியடைந்திருக்கவில்லை என்பதையும் எடுத்துக் கூறியிருந்தார். தனது ஓய்வு காலத்துக்கு முன்னரே தினக்குரல் பத்திரிகையில் இருந்து விலகி யாழ்ப்பாணத்தில் வெளிவந்து கொண்டிருந்த ஈழநாடு நாளிதழில் பிரதம ஆசிரியராகப் பொறுப்பேற்றுச் சென்ற பாரதி 1980களை நினைவுகூர்ந்தார்.

அதாவது, யாழ் ஈழமுரசில் பத்திரிகைப் பணியை ஆரம்பித்து பின்னர் யாழ் முரசொலியில் பணியாற்றிப் பின்னர் கொழும்பில் 35 ஆண்டுகள் பணியாற்றி மீண்டும் யாழ் மண்ணில் அதாவது, 1981 இல் இராணுவப் பின்னணியுடன் எரியூட்டப்பட்ட ஈழநாடு பத்திரிகையில் அதுவும் போர் இல்லாதொழிக்கப்பட்ட 2009 இற்குப் பின்னரான சூழலில் பணியாற்றியமை அவருடைய தேசப் பற்றை எடுத்தியம்புகிறது.

அன்றைய ஈழநாட்டின் தரத்துக்கு இன்றை ஈழநாடு அமைய வேண்டும் என அதன் உரிமையாளர் மூத்த பத்திரிகையாளர் திரு. குகநாதன் வலியுறுத்தியதாக பாரதி சொல்வார்.

அவர் நினைத்திருந்தால், ஈழநாடு ஆசிரியர் பதவியை ஏற்காமல் ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சமடைந்திருக்கலாம். ஆனால் அவர் அந்த வாழ்க்கையை விரும்பியிருக்கவில்லை.

2000 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் நிமலராஜன் கொல்லப்பட்டபோது அதனைக் கண்டித்து கொழும்பில் தமிழ் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதற்குரிய அத்தனை ஏற்பாட்டையும் தனித்து நின்று செய்தவர்.

இதனை அறிந்து தொடர்பு கொண்ட மூத்த சிங்களப் பத்திரிகையாளர் சுனந்ததேசப்பிரிய என்னையும் பாரதியையும் அழைத்து பேசினார். சிங்கள இனவாதத்துக்குள் மூழ்கியிருந்த சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டாளராக அப்போது பொறுப்பேற்றிருந்த சுனந்ததேசப் பிரிய, தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் உள்ளிட்ட ஐந்து ஊடக அமைப்புகளை ஒருங்கிணைத்து அந்த ஆர்ப்பாட்டத்தை கொழும்பில் நடத்தினார். அன்றில் இருந்து 2016 ஆம் ஆண்டு வரை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அத்தனை செயற்பாடுகளையும் முன்னெடுத்திருந்தார்.

2002 இல் சமாதான பேச்சுகள் ஆரம்பிக்கப்பட்டபோது தென்னாபிரிக்க சமாதான முயற்சிக்குரிய ஏற்பாடுகள் மற்றும் அரசியல் தீர்வுகளைப் பற்றி விரிவாக எழுதிய பாரதி அந்த விடயங்களை தினக்குரல் ஆசிரியர் தலையங்கங்களிலும் அவ்வப்போது எழுதியிருந்தார்.

அண்ணன் பாரதிக்கு நோர்வேயின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுக்களில் எந்தவொரு உடன்பாடுகளும் இருக்கவில்லை. பல சந்தர்ப்பங்களில் அவர் அதனை வெளிப்படுத்தியிருந்தார்.

பாரதி, தன்னை ஒருபோதும் வெளிப்படையாகப் புகழ்ந்து பேசியதில்லை. பல அரசியல் கருத்துக்களுக்கு அவர் சொந்தக்காரர். ஆனால், அவர் எந்தவொரு இடத்திலும் அதனை வெளிப்படுத்தவேயில்லை. இலைமறை காய் தான் இந்த பாரதி அண்ணன். பாரதி பற்றி இன்னும் தெரியாத பல விடயங்கள் உண்டு. விரைவில் விரிவான கட்டுரை வெளிவரும்.

அ.நிக்ஸன்
பத்திரிகையாளர்