ஐந்து நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு நல்லிணக்கம் மற்றும் இன விவகாரங்களுக்கான சீன அமைச்சர் பான் யூ தலைமையிலான உயர் மட்ட குழு இன்று (19) இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
இந்த பயணத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளதுடன்,கண்டி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 23ஆம் திகதி வரை இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
இன உறவுகள் தொடர்பாக இலங்கை சீனாவுடன் ஈடுபடுவது இதுவே முதல் முறை என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
சீனாவின் சிறுபான்மை குழுக்களில், மிக முக்கியமானவர்கள் உய்குர் முஸ்லிம்கள். சீனா மில்லியன் கணக்கான உய்குர் முஸ்லிம்களை தடுத்து வைத்துள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.
அமெரிக்கா, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் பிற நாடுகள் சீனாவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளன. எனினும், பயங்கரவாதத்தை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடுவதாக சீனா நிலைநிறுத்துகிறது.
இவ்வாறான பின்னணியில், சீன இன விவகார அமைச்சர் தற்போது இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
அவரது வருகை இலங்கை சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக வாதிடுவதை நோக்கமாகக் கொண்டதா அல்லது சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கான சீனாவின் அணுகுமுறை குறித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு வழிகாட்டுதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.