இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே முன்மொழியப்பட்டுள்ள பல்துறை பெற்றோலிய குழாய் இணைப்பு, அரசியல் ரீதியாக சாத்தியமானதாக இல்லாவிட்டாலும், பொருளாதார ரீதியாக சாத்தியமானதாக இருந்தால் மட்டுமே நிறைவேறும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டபிளியூ.ஏ.ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் சாத்தியக்கூறுகளை இரு தரப்பினரும் தற்போது மதிப்பீடு செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“திட்டத்தின் சாத்தியக்கூறுகளை நாங்கள் மதிப்பிடுவோம். அது சாத்தியமானால் மட்டுமே முன்னேற்றம் இடம்பெறும். அரசியல் காரணங்களுக்காக அதை முடிவு செய்ய முடியாது.
இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகியவற்றை உள்ளடக்கிய முத்தரப்பு திட்டமாக இது முன்மொழியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் ஜனாதிபதி புதுடில்லிக்கு விஜயம் செய்தபோது இந்தத் திட்டம் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு ஆரம்பட்ட இணக்கப்பாட்டுக்கான ஒப்பந்தடம் கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி இணைப்பின் ஒரு பகுதியாகும். அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான மின் கட்ட இணைப்புக்கான திட்டமும் இதன்மூலம் சாத்தியமாகும்.
இதற்கிடையில், திறந்த சந்தையில் இருந்து விலைமனுக் கோரல் செயல்முறை மூலம் எரிபொருள் கொள்முதல் செய்வதற்குப் பதிலாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தாரில் இருந்து நேரடியாக எரிபொருள் கொள்முதல் செய்வது குறித்து இலங்கை பரிசீலித்து வருகிறது.
இங்குள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்துடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும், அந்த நாட்டின் தொழில்நுட்பக் குழுவுடன் மற்றொரு சுற்று கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் ராஜகருணா கூறியுள்ளார்.
இருப்பினும், அண்மையில் ஜனாதிபதி அங்கு சென்றபோது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளுடன் எந்த கலந்துரையாடலும் நடைபெறவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.