கிழக்கு அரசியலில் பரபரப்பான அரசியல் நிகழ்வொன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
தமிழீழ விடுதுலைப் புலிகளில் முக்கிய தளபதிகளாக இருந்து பின்னர் விலகி இலங்கை அரசுக்கு அதரவான நிலைப்பாட்டி எடுத்திருந்த கருணா அம்மான் எனப்படும் வி.முரளீதரன் பிள்ளையான் என்றழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் ஆகியோர் இணைந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் புலிகள் அமைப்பில் கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பான தளபதிகளாக செயல்பட்டிருந்தனர்.
பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக புலிகள் அமைப்பை அழிக்க உதவி செய்யும் முகமாக அவருடன் கைகோர்த்து ஆளுநர் மற்றும் அமைச்சர் பதவிகளை பெற்றனர்.
இந்த நிலையில், மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் கருணா அம்மான், பிள்ளையான் இணைந்து கொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றையும் இன்று (22) மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியொன்றில் கைச்சாத்திட்டனர்.
பாராளுமன்ற தேர்தலில் பின்னடைவை தொடர்ந்து உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்குவதற்காக புதிய முயற்சியொன்றை பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கொண்டு ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதில் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினரும் இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கடந்த 15 ம் திகதி சைச்சாத்திடப்பட்டது.
இதனையடுத்து நடக்க இருக்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் இணைந்து களமிறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் கிழக்கு தமிழர் கூட்டமைப்புடன் கருணா தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்தியதையடுத்து பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைந்துள்ளனர்.