தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜாங்-ஹீ (Han Jong-Hee), தனது 63 ஆவது வயதில் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
சாம்சுங்கின் நுகர்வோர் மின்னணு மற்றும் மொபைல் சாதனப் பிரிவிற்கு ஹான் தலைமை தாங்கினார்.
இதற்கிடையில், மற்றொரு இணை தலைமை நிர்வாக அதிகாரியான ஜுன் யங்-ஹியூன், தென் கொரியாவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனத்தின் சிப் வணிகத்தை நிர்வகிக்கிறார்.
தென் கொரியாவின் மிகப்பெரிய நிறுவனமான ஜாங்-ஹீ, ஸ்மார்ட்போன் சந்தை, தொலைக்காட்சி மற்றும் பிற நுகர்வோர் மின்னணு வணிகங்களில் சீன நிறுவனங்களிடமிருந்து வளர்ந்து வரும் போட்டியை எதிர்கொண்டுள்ள நிலையில், அவரது மரணம் நிகழ்ந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது மாரடைப்பால் ஹான் காலமானார் என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
அடுத்த தலைமை நிர்வாக அதிகாரி குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
கொரியா ஜூங்ஆங் டெய்லியின் அறிக்கையின்படி, தெற்கு சியோலில் உள்ள சாம்சுங் மருத்துவ மையத்தில் வியாழக்கிழமை (27)ஊர்வலத்துடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹான், 2022 ஆம் ஆண்டில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்.
மேலும், நிறுவனத்தின் குழு உறுப்பினர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டார்.
1962 ஆம் ஆண்டு பிறந்த ஹான், 1988 ஆம் ஆண்டு சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் விஷுவல் டிஸ்ப்ளே பிரிவில் பணியாற்றத் தொடங்கினார்.
சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தொலைக்காட்சி வணிகத்தை வளர்ப்பதில் முக்கிய நபராக அவர் பிரபலமாகக் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.