இஸ்ரேல் பலஸ்தீனத்தின் மீது நடத்திவரும் தாக்குதல்களை கண்டித்து பலஸ்தீனத்துக்கு ஆதரவான மக்களும் முஸ்லிம் மக்களும் தொடர்ச்சியான போராட்டங்களை உலகம் முழுவதும் முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையில் அத்தகைய போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையில் தொடர்ச்சியாக அமையப் பெற்ற அரசாங்கங்கள், பலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டுள்ளன.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், பலஸ்தீன் மக்களுக்கு சுதந்திர நாட்டை வழங்குமாறும் அந்நாட்டில் நடைபெறும் கொலைகளை நிறுத்துமாறும் கோரி இஸ்ரேலுக்கு எதிராக அமைதி கவனயீரை்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நேற்று 28 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்னர் கொழும்பு 7 தெவட்டகஹ ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாக நடைபெற்றது.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பிரதி சபாநாயகர் வைத்தியர் றிஸ்வி சாலிஹ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பிரதி சபாநாயகர் வைத்தியர் றிஸ்வி சாலிஹ் கருத்து தெரிவிக்கையில், இஸ்ரேல் பலஸ்தீன் மக்களையும், குழந்தைகளையும், தாய்மார்களையும் கொன்று குவிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இதற்காக இலங்கை உட்பட உலக நாடுகள் ஒன்றுபட்டு ஐ.நா. ஊடாக அமெரிக்கா இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்தல் வேண்டும். இந்த நோன்பு மாதத்தில் அவர்கள் செய்யும் கொலைகளை உடன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
பலஸ்தீன் சுதந்திர இயக்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.