அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும், இதற்கு இணங்க மறுத்தால் அபராதமும் சிறைதண்டனையும் விதிக்கப்படும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டினர், உடனடியாக அமெரிக்க அரசில் தங்களை பதிவு செய்துகொள்ளவேண்டும். இதனை ஏற்கத் தவறுவது சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் குற்றமாகும்.
ட்ரம்ப் அரசு நிர்வாகமும், உள்நாட்டு பாதுகாப்புத்துறை செயலாளர் க்ரிஷி நோம் ஆகியோர் வெளிநாட்டினருக்கு தெளிவான செய்தியை தெரிவிக்கின்றனர். இப்போதே நீங்களாகவே உங்களை நாடு கடத்திக் கொள்ளுங்கள் என்பதே அது.” என்று தெரிவித்துள்ளது. மேலும், அமெரித்த ஜனாதிபதி அலுவலகம் மற்றும் க்ரிஷி நோமை டேக் செய்துள்ளது.
மேலும் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கான செய்தி என்று, சுயமாக நாட்டை விட்டு வெளியேறுவதன் நன்மை மற்றும் பின்விளைவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதன் படி, சுயமாக வெளியேறுவது மிகவும் பாதுகாப்பானது. நீங்கள் செல்லவிருக்கும் விமானத்தை உங்களின் விருப்பப்படி தேர்வு செய்யலாம். நீங்கள் குற்றமற்ற சட்ட விரோதமில்லாமல் சுயமாக வெளியேறினால் அமெரிக்காவில் சம்பாதித்த பணத்தை உங்களுடன் எடுத்துச் செல்லலாம்.
நீங்களாகவே சுயமாக வெளியேறும் போது எதிர்காலத்தில் சட்டப்பூர்வமாக அமெரிக்காவுக்கும் வரும் வாய்ப்பைப் பெறலாம். ஒருவேளை அவ்வாறு வெளியேற முடியாதவர்கள், சலுகை விலையில் விமானப்பயணத்துக்கான வாய்ப்பினைப் பொறலாம் என்று தெரிவித்துள்ளது.
அதேபோல் வெளியேறாதவர்கள் சந்திக்க இருக்கும் விளைவுகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. சுயமாக வெளியேறாதவர்களை உள்நாட்டு பாதுகாப்புத்துறை அடையாளம் கண்டவுடன் அவர்கள் நாடுகடத்தல் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
நீங்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான இறுதி உத்தரவை பெற்ற பின்பு நாளொன்றுக்கு 998 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்படும். நீங்கள் வெளியேறுவதாகக் கூறிவிட்டு அதைச் செய்யத்தவறினால், 1000 முதல் 5000 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும்.
சுயமாக நீங்கள் நாட்டைவிட்டு வெளியேறாவிட்டால் சிறைதண்டனைக்கு ஆளாகலாம். அதேபோல் தங்களைப் பதிவு செய்யாதவர்கள், சட்டப்பூர்வ குடியேற்ற முறைப்படி அமெரிக்காவுக்கு மீண்டும் வர தடைவிதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுகள் அமெரிக்க ஹெச் 1 பி மற்றும் மாணவர் அனுமதி விசா வைத்திருப்பவர்களை நேரடியாக பாதிக்காது, என்றாலும் முறையான அனுமதி இல்லாமல் அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்குவதை தடுக்க சட்டப்பூர்வமான எச்சரிக்கையை வழங்குகிறது.
ஹெச் 1 பி விசா வைத்திருப்பவர்கள் வேலை இழந்திருந்தாலும் குறிப்பிட்ட காலத்துக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேறத்தவறினால் சட்டப்பூர்வ நடவடிக்கையைச் சந்திக்க வேண்டி இருக்கும். எனவே ஹெச் 1 பி மற்றும் மாணவர் விசா வைத்திப்பவர்கள் அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கான காரணத்தையும் அதற்கான தேவையையும் தெரிவித்திருக்க வேண்டும்.