அமெரிக்கா உலக நாடுகளுக்கு விதித்த திடீர் வரியால் சீனா உட்பட பல வல்லரசு நாடுகள்கூட ஆட்டங்கண்டுள்ளன.
வரி அதிகரிப்பை இலங்கை உட்பட பெரும்பாலான நாடுகள் எதிர்பார்த்திருந்த போதிலும், அது பல மடங்காக இருக்கும் என எந்தவொரு நாடும் கணிக்கவில்லை. அதன் காரணமாகவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அறிவிப்பு பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
என்றாலும், சீனா தொடர்ந்து அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிர்வினையாற்றி வருகிறது. சீன பொருட்களுக்கு அமெரிக்கா 145 வீத வரியை விதித்துள்ளது. சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு 125 வீத வரியை விதித்துள்ளது.
அமெரிக்கா பின்வாங்கினால் மாத்திரமே நாமும் பின்வாங்குவோம் என சீனா கூறிவருகிறது. என்றாலும், ஏனைய நாடுகளுக்கு விதித் விரியை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
இந்த மூன்று மாதகாலப்பகுதிகள் பேச்சுவார்த்தை ஊடாக இணக்கம் காண பல நாடுகளின் பிரிதிநிதிகள் வோஷிங்டனில் முகாமிட்டுள்ளனர். இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்றும் வோஷிங்டன் முகாமிட்டுள்ளது.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையே வரி தொடர்பிலான உயர்மட்ட கலந்துரையாடல் வோஷிங்டன் டி.சி.யில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. பரஸ்பர வரிகளால் ஏற்படும் தொடர்ச்சியான சவால்களை நிவர்த்தி செய்வதே இந்த சந்திப்பின் நோக்கமாகும்.
இலங்கை பிரதிநிதிகள் குழுவில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, வர்த்தக அமைச்சின் செயலாளர் மற்றும் அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக தொழில் அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள் பயனுள்ளதாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர வரிகள் குறிப்பிடத்தக்க பொருளாதார சவால்களை உருவாக்கியுள்ளன. அமெரிக்காவின் திருத்தப்பட்ட வர்த்தகக் கொள்கையின் கீழ், இலங்கைப் பொருட்களுக்கு 44% வரை வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் இலங்கையின் முக்கிய ஏற்றுமதித் தொழிலான ஆடைத் துறை பெரிதும் பாதித்துள்ளது.
என்றாலும், இந்த வரி விதிப்பை மூன்று மாதகாலம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒத்திவைத்துள்ளார். இந்தக் காலப்பகுதிக்குள் அமெரிக்காவுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கிலேயே இந்த பேச்சுகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
வோஷிங்டனில் இடம்பெற்று வரும் கலந்துரையாடல் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.