சாமர சம்பத் விவகாரம் – ரணில் விக்ரமசிங்கவிடம் விசாரணை

0
23
Article Top Ad

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்கவுடன் தொடர்புடைய ஊழல் மோசடி விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்க, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை கொழும்பில் உள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

காரணம்

கடந்த 2016ஆம் ஆண்டு சாமர சம்பத் தசநாயக்க தனது பதவிக்காலத்தில் 17.3 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிலையான வைப்புக்களை முன்கூட்டியே திரும்பப் பெற்று, அரசுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குப் பதிவு செய்துள்ளதோடு, விசாரணைகளின் அடிப்படையில் சாமர தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், திறைசேரி செயலாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு இணங்க, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒப்புதலுடன் இந்த வைப்புத்தொகை மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாக கருத்துத் தெரிவித்தார்.

ரணிலின் இந்த கூற்றானது, சாமரவிற்கு எதிரான வழக்கில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என ஆணைக்குழு கருதுகின்ற நிலையில், இதுகுறித்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக ரணில் அழைக்கப்பட்டுள்ளார்.