இலங்கையில் இடம்பெற்ற அநீதிகள் இன படுகொலைகள் மற்றும் அரசியல் கொலைகள் சம்பந்தமான சர்வதேச பார்வையானது குறைவடைந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
சுவீடன் ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்ற அமைதி மற்றும் மேம்பாட்டு மன்றம் 2025 என்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார்.
இதற்காக காரணம், இலங்கையில் 2009ஆம் ஆண்டு முடிவடைந்த உள்நாட்டுப் போருக்குப் பின்னரும் உலகில் பல பகுதிகளில் யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வகை மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறிய நடவடிக்கைகள் தொடர்ந்தும் சில நாடுகளில், குறிப்பாக ஈராக், சிரியா, மியான்மார், ரஷ்யா, இஸ்ரேல், உக்ரைன், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளின் இடம்பெறுகின்றன. இந்நாடுகள் அனைத்தும், யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையதாக சர்வதேச அமைப்புகளால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கான முன்னுரிமை காரணமாக இலங்கையில் இடம்பெற்ற விடயங்களுக்கான கரிசனை குறைவாக காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
யுத்தம் மெளனிக்கப்பட்டும் நாட்டின் அரசியல் நிலைமை பொருளாதாரம் என்பன நிலையற்று காணப்படுகின்றது எனக் குறிப்பிட்ட சாணக்கியன், குறிப்பாக தமிழ் மக்களுக்கான நீதியானது முழுமையாக கேள்விக்குறியாகவே உள்ளதென கூறியுள்ளார்.
இந்நிலையில், ஆரோக்கியமான, பொருளாதார பலம்மிக்க, நீதியான நாட்டை கட்டியெழுப்புவதற்கு சர்வதேசத்தின் அழுத்தம் அவசியம் என சாணக்கியன் கூறியுள்ளார்.