இலங்கையில் தமிழ் இன அழிப்பு இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கனடாவில் பிரிம்டன் நகர சபைக்கு உட்பட்ட பகுதியொன்றில் தமிழின அழிப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபி தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை தனியார் தொலைக்காட்சியொன்றில் கருத்து வெளியிட்ட அவர்,
”இலங்கையில் தமிழ் இன அழிப்பு இடம்பெற்றதாக கூறும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கிறது. கனடாவின் பிரிம்டன் நகர சபையின் அனுசரணையுடன் அமைக்கப்பட்டுள்ள குறித்த நினைவுத் தூபிக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
இறுதி யுத்தத்தில் நந்திக்கடல் பகுதியில் கை குழந்தைகளுடன் வந்தவர்களைக்கூட எமது இராணுவத்தினர்தான் காப்பாற்றியிருந்தனர். இன அழிப்பு என்பது தமிழர்களை இராணுவத்தினர் தேடி தேடி கொலை செய்திருக்க வேண்டும். அவ்வாறு இடம்பெற்றதா? யுத்தக்காலத்தில் சரணடைந்த அல்லது இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தவர்களை இராணுவத்தினர்தான் காப்பாற்றியிருந்தனர்.” என்றார்.
இதேவேளை, தமிழ் இன அழிப்பு உள்ளிட்ட பதங்களை பயன்படுத்தி கோஷங்கள் மற்றும் பதாதைகள் வைக்கப்படுகின்றன. முள்ளிவாய்க்கால் பகுதியில் இம்முறையும் இந்தப் பதங்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எதுவும் ஏன் எடுக்கப்படுவதில்லை என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர்
இன அழிப்பு போன்ற கருத்துகள் பகிரப்படுவதற்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.