வடக்கு மக்களின் காணிகளை பறிக்க அரசாங்கம் திட்டம் – தென்னாபிரிக்க தூதுவரிடம் எடுத்துரைத்த கஜேந்திரகுமார் எம்.பி

0
1
Article Top Ad

வடக்கில் காணி அபகரிப்பு நோக்கத்திற்காக அரசு வெளியிட்ட வர்த்தமானியை உடன் இரத்துச்செய்ய தென்னாபிரிக்க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் எம்.பி இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதரிடம் கோரிக்கை விடுத்தார்.

தென்னாபிரிக்க தூதுவருக்கும் கஜேந்திரகுமார் எம்.பிக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை கொழும்பிலுள்ள தென்னாபிரிக்க தூதரகத்தில் நடைபெற்றது.

இ்நத சந்திப்பின் பின்னர் கஜேந்திரகுமார் எம்.பி ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,

இன்று காலை கொழும்பில் உள்ள தென்னாபிரிக்க தூதுவரைச் சந்தித்தேன். அவருடனான சந்திப்பில் மூன்று விடயங்கள் தொடர்பில் பேசியிருந்தேன்.

இந்த சந்திப்பின் போது கடந்த 2025 மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட வடமாகாணத்தின் சுமார் 6000 ஏக்கர் காணிகளை அரச காணியாக சுவீகரித்து திட்டமிட்ட சிங்கள பௌத்த மயமாக்கலை மேற்கொள்ளும் கபட முயற்சிக்கு எதிராக நாம் எமது ஆட்சேபனைகளை தெரிவித்திருந்தோம்.

மூன்று மாத காலத்தில் மக்கள் தமது காணிகளை உறுதிபடுத்த வேண்டும் என்ற அந்த அடிப்படையில் அரசு வெளியிட்ட குறித்த வர்த்தமானியை அரசு மீளப் பெறவேண்டும் எனவும் அதற்கான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினோம்.

வடகிழக்கு மக்கள் யுத்தகாலத்தில் பலதடவைகள் இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்களின் சொந்தமான ஆவணங்கள் அழிவடைந்தும் தொலைந்தும் உள்ளன. அத்துடன் சுனாமி மூலம் எமது மக்கள் சொத்துக்கள் ஆவணங்களை இழந்தார்கள். ஆகவே ஆவணங்கள் மூலம் உறுதிபடுத்துவது சாத்தியமற்ற விடயம்.

போர் காரணமாக மக்கள் பெருமளவில் புலம்பெயர்ந்துள்ளனர். இந்த மக்கள் பயங்கரவாத தடைச் சட்ட அச்சுறுத்தல் காரணமாகவும் நாட்டை விட்டு வெளியேறினார்கள்.

இவர்களின் நோக்கம் மக்களின் காணி பிரச்சினைகளை தீர்ப்பது இல்லை. மாறாக மக்களின் ஆவணங்களற்ற காணிகளை அரச காணிகளாக சுவீகரிப்பதாகும்.

ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உரித்துக்கள் வழங்கப்படல் வேண்டும் என்பதில் மாற்றுகருத்திற்கு இடமில்லை. ஆனாலும்
இந்த வர்த்தமானி மூலம் மேற்கொள்ளப்படவுள்ள அபகரிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இரண்டாவது விடயம் குருந்தூர்மலையில் தொல்பொருள் திணைக்களத்திற்கு 79 ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே சொந்தமானதென 1932 ஆம் ஆண்டு வர்த்தமானி வெளிப்படுத்துகிறது. எனினும் அதற்கு மேலதிகமாக 325 ஏக்கர் காணியினை குறித்த தொல்பொருட் திணைக்களத்திற்கு வழங்க வேண்டுமென கடந்த ஆட்சிக்காலத்தில் பௌத்த பிக்கு அரசிடம் கோரியிருந்தார்.

எனினும் தமிழ் மக்கள் விவசாயம் செய்துவந்த காணிகள் என்பதனால் அவர்களது விவசாய நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு அப்போதய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்ததுடன் குறித்த 325 ஏக்கரிலும் பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டிருந்தது.

எனினும் வழமைபோன்று குறித்த பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மூன்றுபேர் நீதிக்குப் புறம்பாக கைது செய்பட்டு இரண்டுபேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மட்டத்தில் தீர்வு எட்டபட்ட ஒ ரு தீர்மானத்தினை அமுல்படுத்தாமல் விவசாய நடவடிக்கைகள் தடுக்கப்பட்டுள்ளதுடன் அந்த வயல்களுக்கு நீர்விநியோகம் செய்ய வேண்டிய குளத்தில் தமிழ் மக்கள் மீன்பிடியில் ஈடுபடவும் தடையும் விதிக்கப்பட்டுள்ளதுடன், விவசாயத்திற்கு குறித்த நீரை பயன்படுத்த தடையையும் விதித்துள்ளனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல்கள் எதுவும் அற்ற குறித்த பகுதியில் மக்கள் சுதந்திரமாக தொழில் செய்வதனை உறுதிப்படுத்தவும் அநீதியான முறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு விவசாயிகளை விடுவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

மூன்றாவது விடயமாக தையிட்டி சட்டவிரோதமான விகாரை தொடர்பில் பேசியிருந்தோம் . சட்டவிரோதமான விகாரை என்று தெரிந்தும் இன்னமும் அந்த காணிகளின் உரிமையாளர்களிடம் வழங்காது அரசின் செயற்பாடுகள் தொடர்கின்றது.தையிட்டி விகாரை சட்டவிரோதமானது தொல்பொருளுடன் தொடர்பு அற்றது சட்டவிரோதமாக கட்டப்பட்டது அகற்றபட்டே ஆகவேண்டும். காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படல் வேண்டுமெனவும் அதற்கான நடவடிக்கைகளை முன்னுடுக்க வேண்டுமெனவும் கோரியிருந்தேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here