உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் இலங்கைக்கு வந்துள்ளார்.
2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். அவரை வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர நேற்றிரவு (24) வரவேற்றுள்ளார்.
இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
நியூசிலாந்து துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் இந்த விஜயத்தின் போது எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளார். அவரின் விஜயமானது, அவுஸ்திரேலியா, இலங்கை, நேபாளம் மற்றும் இந்தியாவுக்காக அமைந்துள்ளதுடன், இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை தொடர்ந்து, இந்தியா மற்றும் நேபாளத்திற்கும் நியூசிலாந்தின் துணைப் பிரதமர் செல்லவுள்ளார்.
இந்த விஜயம் நீண்டகால கூட்டாண்மையை முன்னேற்றுவதற்கும், பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை ஆராய்வதற்கும் புதுப்பிக்கப்பட்ட உறுதிப்பாட்டைக் குறிக்கின்றது என்றும் வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். நியூசிலாந்துடனான அதன் நீண்டகால நட்பை இலங்கை மதிக்கின்றது மற்றும் வரும் ஆண்டுகளில் இந்த கூட்டாண்மையை ஆழப்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.