தேர்தல் பிரச்சார செலவுகளை ஒழுங்குபடுத்தும் 2023ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம், நிதி விவரங்களைச் சமர்ப்பிக்கத் தவறும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இச்சட்டத்தின் பிரகாரம், தேர்தல் நிறைவடைந்து 21 நாட்களுக்குள் நிதி விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அந்தவகையில் இன்று (27) இதற்கான இறுதி திகதியாகும்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, நிதி விபர அறிக்கை தொடர்பான சமர்ப்பிப்புகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இணங்கத் தவறுபவர்கள் சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட சட்ட விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறியுள்ளார்.
சட்ட அமுலாக்கத்தின் கடந்த கால சவால்கள்
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு ஒவ்வொரு தேர்தல் முடிவடைந்த பின்னரும் கூறி வருகின்றது. ஆனால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதுதான் இங்குள்ள கேள்வி. முந்தைய தேர்தல்களுக்குப் பிறகும், நிதி அறிக்கைகளை தாக்கல் செய்யத் தவறிய பல வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு சட்ட நடவடிக்கைக்குச் சென்றது. எனினும், இந்த செயன்முறை பெரும்பாலும் சவால்களுக்கு உட்பட்டது. விசாரணைகளுக்கு பொலிஸ் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்துடனான ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. மேலும் ஒவ்வொரு வழக்கையும் நீதிமன்றங்கள் மூலம் தனித்தனியாக செயற்படுத்த வேண்டும்.
எந்தவொரு வழக்கும் நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு முன்பு, வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கும் ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும் பொலிஸாரை நம்பியிருக்க வேண்டியுள்ளது. உதாரணமாக, எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில், 150 வழக்குகளுக்கும் பொலிஸார் 150 வாக்குமூலங்களை பதிவுசெய்ய வேண்டியிருந்தது. இதற்கு நாட்செல்லும். அதன் பின்னர் சட்ட நடவடிக்கை எனும்போது, எமது நாட்டின் நீதித்துறையில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையை பார்த்தால், இதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் போது, சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட நபர் தமது பதவிக்காலத்தை பூர்த்திசெய்தும் இருக்கலாம். அல்லது இன்னொரு தேர்தலிலும் போட்டியிடலாம்.
சட்டத்தில் உள்ள பலவீனங்கள்
தேர்தல் பிரச்சார செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் அமுலாக்கத்தைப் பொறுத்தவரை, முக்கிய குறைபாடுகளைக் கொண்டுள்ளது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். வேட்பாளர்களின் நிதி அறிக்கைகள் துல்லியமானவையா என்பதைச் சரிபார்ப்பதற்கான அதிகாரத்தையும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இந்தச் சட்டம் வழங்கவில்லை. விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் அல்லது தகுதி நீக்கம் போன்ற தானியங்கி தண்டனைகளும் இதில் இல்லை. ஒரு வேட்பாளர் தனது பிரச்சார செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறினால், நீதிபதி முடிவு செய்யும் வரை காத்திருக்காமல், சட்டம் தானாகவே அபராதம் விதிக்கலாம் அல்லது எதிர்காலத் தேர்தல்களில் போட்டியிடுவதைத் தடை செய்யலாம். தற்போதைய சட்டத்தின் பிரகாரம், நீதிமன்ற செயன்முறை அவசியமாக உள்ளதால், இது நீண்ட காலம் எடுக்கலாம் மற்றும் நீதியை தாமதப்படுத்தலாம் அல்லது தண்டனைகளில் இருந்து தப்பிப்பதற்கும் ஏதுவாக உள்ளது.
சீர்திருத்தத்திற்கான அவசியம்
இந்தச் சட்டத்தை வலுப்படுத்த சிவில் சமூகம் மற்றும் தேர்தல் செயற்பாட்டாளர்களிடம் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையத்திற்கு அதிக விசாரணை அதிகாரங்களை வழங்குதல், இணங்காதவர்களுக்கு தானியங்கி அபராதங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் சரியான நேரத்தில் செயற்படுத்தப்படுவதை உறுதிசெய்ய சட்ட செயன்முறையை நெறிப்படுத்துதல் ஆகியவை பரிந்துரைகளில் அடங்கும்.
எதிர்கால தேர்தல்களில் உண்மையான வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய விரைவான சீர்திருத்தங்கள் அவசியம்.
நிதி விபரங்கள் பற்றிய வெளிப்படுத்தல்களைப் பெறுவதற்கும் வெளியிடுவதற்கும் மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு. பொதுமக்களில் ஒருவர் இதுபற்றி முறைப்பாடு அளிக்காவிட்டால் இதுகுறித்து ஆராய்ந்து பார்க்கவோ சரிபார்க்கவோ எந்தவொரு பொறிமுறையும் கிடையாது.
தேர்தல் செலவு மீற்றர் என்ற ஒரு பொறிமுறை ஊடாக கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களின் போது செலவு விபரங்கள் பதிவேற்றப்பட்டன. இவை, அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையாக வைத்தே பதிவேற்றப்பட்டன. அறிக்கையிடப்படாத விடயங்கள் தொடர்பாக கண்காணிக்கும் பொறிமுறைகள் இல்லை. உதாரணமாக, தற்போது முகப்புத்தக பிரச்சாரத்திற்கான செலவுகள் பற்றி கண்டறியலாம். ஆனால், வேறு பக்கங்கள், அல்லது போலி பக்கங்கள் ஊடாக செய்பவற்றை எவ்வாறு கண்டறிவது என்பது அடுத்த பிரச்சினை.
இவ்வாறான பலவீனங்கள் காரணமாகத்தான், பல வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் பிரச்சார நிதிச் சட்டத்தை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. பெரும்பாலும் அறிக்கைகளைச் சமர்ப்பிக்க கடைசி தருணம் வரை காத்திருக்கிறார்கள் அல்லது தேவையை முற்றிலுமாக புறக்கணிக்கிறார்கள். இப்பிரச்சினைகளும் அமுலாக்க முயற்சிகளை மேலும் சிக்கலாக்குகிறது.
விரைவான அபராதங்களை விதிக்க அல்லது வெளிப்படுத்தல்களைச் சரிபார்க்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லாதபோது, வேட்பாளர்கள் விளைவுகளுக்கு அஞ்சாமல் விதிகளைப் புறக்கணிக்கலாம்.
வெளிப்படைத்தன்மை என்பது வெளிப்படுத்தல் சட்டங்களை மட்டுமல்ல, விரைவாகவும் திறம்படவும் செயற்படுவதற்கு போதுமான வளங்கள் மற்றும் அதிகாரத்துடன் கூடிய வலுவான, சுயாதீனமான அமுலாக்க வழிமுறைகளையும் சார்ந்துள்ளது என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
செய்தியாக்கம் – கே.கே.