தமிழக மீனவர்களின் இன்னல்களை போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவொற்றியூரில் அமைக்கப்பட்ட மீன்பிடித் துறைமுக திறப்புவிழாவில் இன்று (28) காலை பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளில் இடம்பெற்ற 97 கைது நடவடிக்கைகளில், இலங்கை கடற்படையால் 185 படகுகள் கைப்பற்றப்பட்டதோடு, 1,383 தமிழக மீனவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். தாம் எடுத்த நடவடிக்கைகளால் இதுவரை 1,154 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு மீட்கப்பட்டனர் என்றும், இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இதுவரை 76 கடிதங்களை எழுதியுள்ளேன் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
தொடர் வலியுறுத்தல் காரணமாக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்ட ஸ்டாலின், எஞ்சியுள்ள 23 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், மீனவர்களின் இன்னல்களை போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி என்றும், கச்சத்தீவை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.