2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, நாட்டில் தனிநபர்களின் வாழ்க்கைச் செலவு இரு மடங்காக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியில் நேற்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பில் மத்திய வங்கியின் உதவி ஆளுநர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட வருமானத்தைப் பார்த்தாலும், அதிகரித்த விலை நிலைகள் மற்றும் அதிகரித்த வாழ்க்கைச் செலவு காரணமாக ஒரு கடினமான சூழ்நிலையில் இருப்பதைக் காணலாம் எனக் குறிப்பிட்ட உதவி ஆளுநர், உதாரணமாக 2021 ஆண்டுடன் 2024ஆம் ஆண்டை ஒப்பிட்டால், வாழ்க்கைச் செலவு இரட்டிப்பாகியுள்ளது என சுட்டிக்காட்டினார்.
பணவீக்கம் குறைவதால் பொதுமக்கள் தற்போது பயனடைந்து வந்தாலும், 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வாழ்க்கைச் செலவு பொதுமக்கள் உணரக்கூடிய அளவில் உள்ளது என குறிப்பிட்டார்.
அரச ஊழியர்களாக இருந்தாலும், தனியார் ஊழியர்களாக இருந்தாலும், அல்லது வணிகங்களின் வருமானமாக இருந்தாலும், அந்த வருமானத்தை அதிகரிக்க அதேபோன்று பொருளாதார வளர்ச்சியும் இருக்க வேண்டும். எதிர்காலத்தில் அந்த வகையான பொருளாதாரம் இருக்கும் என நினைக்கிறோம் என்றும் மத்திய வங்கியின் உதவி ஆளுநர் குறிப்பிட்டார்.