வடக்கு மாகாணத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பாதைகளை அரசு விடுவிக்கும் போதும், காணிகளை விடுவிக்கும்போதும் தென்பகுதியில் உள்ள சில அரசியல்வாதிகள் அதற்கெதிராக குரல் கொடுக்கும் நிலைமை இப்போதும் காணப்படுகின்றது என, நோர்வே பிரதித் தூதுவரிடம் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த நோர்வேயின் பிரதித் தூதுவர் அம்டால் பொத்தேம், வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநரின் செயலகத்தில் நேற்று சந்தித்தார். இதன்போது, ஆளுநர் இவ்விடயத்தை கூறியுள்ளார்.
அத்தோடு, யாழ். மாவட்டத்திற்கான குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு, கடல் நீரை சுத்திகரிக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டாலும், அதற்கான செலவு அதிகம் என்பதை சுட்டிக்காட்டினார். இந்நிலையில், மாற்றுத்திட்டங்கள் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
இதேவேளை, சுற்றுலாத்துறை அபிவிருத்தி யாழ்ப்பாணத்தில் முக்கியமானதாக மாறிவரும் நிலையில், கழிவுநீர் சுத்திகரிப்பு பொறிமுறை இல்லாததால் பல சவால்களுக்கு முகங்கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.