தொன்மை வரலாறு கொண்ட உகந்தை முருகன் ஆலயம் கடந்த சில நாட்களாக இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பேசு பொருளாக மாறிய வருகின்றது.
அம்பாறை மாவட்டத்தின் லாகுகல பிரதேச செயலாளர் பிரிவு தென் எல்லையில் அமைந்துள்ள தமிழர்களுடைய தொன்மையும் புராதனமும் வரலாறும் கொண்ட உகந்தை முருகன் ஆலய புனித பிரதேச பகுதியில் காணப்படும் ஒரு மலையில் திடீரென அப்பகுதியில் நிலை கொண்டுள்ள கடற்படையினரால் ஸ்தாபிக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பான விவகாரம் தொடர்பில் பல்வேறு எதிர்மறையான கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
ஆலயத்தில் உள்ளவர்கள் கூறும் போது, இந்த புத்தர் சிலை நிறுவுகின்ற விடயம் 2023ல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. 2024 இல் ஒரு புத்தர் சிலை இங்கே நிறுவப்பட்டது எனக் கூறினர்.
அத்தோடு கடந்த இரண்டு மாதங்களாக இந்த புத்தர் சிலை பெரிய அளவில் இங்கே ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறினர்.
முருகன் ஆலயத்திற்கு முன்பாக கடற்கரை பிரதேசத்தில் வலது புறம் வள்ளியம்மன் மலை தோணிமலை போன்றவைகளும், இடது புறம் கடற்படை முகாமோடு இணைந்ததாகக் காணப்படுகின்றது. அந்த மலையில் தான் இந்த புத்தர் சிலையும் நிறுவப்பட்டு இருக்கிறது.
இந்த புத்தர் சிலை கடற்படை முகாமில் இருந்து வந்த சிவில் உடை தரித்த இருவரால் நிறுவப்பட்டுள்ளது.
மேலும் உகந்தை முருகன் திருவெம்பாவை காலத்தில் தீர்த்தம் ஆடுகின்ற அந்த பிரதேசத்தில் இதற்கு முன்னர் ஒரு சூலம் நிறுவப்பட்டிருந்தது. இப்போது அந்த சூலம் அகற்றப்பட்டிருக்கிறது என்றும் ஆலயத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய தினம் ஆலயத்திற்கு புலனாய்வுத் துறையினரும் வந்து தங்களிடம் இதை புத்தர் சிலையை புகைப்படம் எடுத்தது யார் ஊடகங்களில் வெளியிட்டது என்று கேட்டிருந்தார்கள். இந்த இடத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அவர்கள் வருகை தந்துள்ளனர்.
எனவே இதன் பின்னணி என்ன என்பதையும் இது தொடர்பான உண்மைகளையும் உரிய திணைக்களங்கள் உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதோடு இந்த சிலை நிறுவிய விடயம் சைவத் தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தங்களுடைய உரிமை மறுக்கப்பட்டு இன்னும் ஒரு சமூகத்திற்கு உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த அரசு உடனடியாக இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் எங்களுடைய கோரிக்கையை முன் வைக்கின்றோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.