கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் பிரதிநிதி ஒருவர் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் இப்பகுதியில் விவசாயிகள் பயிரிட்ட இலட்சக்கணக்கான ஏக்கர் காணிகளை அரச நிறுவனங்கள் எவ்வாறு கையகப்படுத்தியுள்ளன என்பதை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த புள்ளிவிபரங்களுக்கு அமைய, திருகோணமலை மாவட்ட மக்களிடமிருந்து வனவளப் பாதுகாப்புத் திணைக்களம் மிகப்பெரிய அளவில் விவசாய காணிகளை கையகப்படுத்தியுள்ளது.
“திருகோணமலை மாவட்டத்திலே 1985ஆம் ஆண்டுக்கு முன்பு மக்கள் விவசாயம் செய்த 118,710 ஏக்கர் நிலத்தை வன பாதுகாப்புத் திணைக்களமும் 111,619 ஏக்கர் நிலத்தை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களமும் 2,599 ஏக்கர் நிலத்தை தொல் பொருள் திணைக்களமும் பூஜா பூமி, பூஜாக் கொடை என்னும் பெயர்களில் ஏறத்தாழ 3,820 ஏக்கர் நிலத்தை புத்த பிக்குமாரும் ஆக மொத்தம் மக்கள் விவசாயம் செய்த 236,748 ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர்.”
விவசாய நிலங்களை கையகப்படுத்துவதால், ஒரே பருவத்தில் இலட்சக்கணக்கான மெட்ரிக் டன் நெல் உற்பத்தி இழக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் வலியுறுத்தினார்.
“இதன் மூலம் ஒரு போகத்தில் மாத்திரம் சுமார் ஐந்து இலட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி இல்லாமல் போகின்றது. இதை இந்த அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இதனை விடுவிப்பதன் மூலம் ஐந்து இலட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தியை அதிகரிக்க ஆவன செய்யவேண்டும். அரிசி மற்றும் நெல் இறக்குமதியை நிறுத்த வேண்டும்.”
திருகோணமலை மாவட்டத்தில் வன பாதுகாப்புத் திணைக்களம் எல்லைக் கற்களைப் பயன்படுத்தி விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்திய பல பகுதிகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் கோடிட்டுக் காட்டினார்.
“திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் சம்பூர் கிராம சேவையாளர் பிரிவில் 40 விவசாயிகளுக்கு சொந்தமான 250 ஏக்கர் நிலத்தையும் கிளிவெட்டி கிராம சேவகர் பிரிவில் 37 விவசாயிகளுக்கு சொந்தமான 85 ஏக்கர் நிலத்தையும் பாரதிபுரம் கிராம சேவகர் பிரிவில் 45 விவசாயிகளுக்கு சொந்தமான 117 ஏக்கர் நிலத்தையும், ஆசாத்நகர் கிராம சேவகர் பிரிவில் 70 விவசாயிகளுக்கு சொந்தமான 148 ஏக்கர் நிலத்தையும் தோப்பூர் கிராம சேவையாளர் பிரிவில் 60 விவசாயிகளுக்கு சொந்தமான 93 ஏக்கர் நிலத்தையும் என ஆக மொத்தம் 252 விவசாயிகளுக்கு சொந்தமான 693 ஏக்கர் நிலத்தை வன பாதுகாப்புத் திணைக்களம் தனது எல்லைக் கற்களை இட்டு பிடித்து வருவதோடு விவசாயிகளை விவசாயம் செய்ய விடாமல் தடுத்தும் வருகின்றது.”
வன பாதுகாப்புத் திணைக்களத்தின் இந்த நில அபகரிப்பைத் தடுக்க தலையிடுமாறு, துறைக்குப் பொறுப்பான அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன் கோரிக்கை விடுத்தார்.
“இதேபோல், சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் தங்கநகர் கிராம சேவையாளர் பிரிவிலும் 85 விவசாயிகளுக்கு சொந்தமான 145 ஏக்கர் நிலத்தை எல்லைக் கற்களை போட்டு பிடித்துள்ளது. வன பாதுகாப்புத் திணைக்களத்தின் இந்த செயற்பாட்டை உடன் நிறுத்த ஆவன செய்யுமாறு துறைசார் அமைச்சரைக் கேட்டுகொள்கிறேன்..”
நாட்டின் ஆட்சியாளர்கள் மாறியிருந்தாலும், ஆட்சியின் பாணி எந்த மாற்றமும் இல்லாமல் செயல்படுத்தப்படுகிறது எனவும் மக்கள் பிரதிநிதி குகதாசன் சுட்டிக்காட்டுகின்றார்.
“திருகோணமலை மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்துதலைப் பொறுத்தவரை, ஆட்சியாளர்கள் மாறியிருந்தாலும் ஆட்சியின் பாணி மாறவில்லை. 1983 முதல் 2009 வரையிலான போரின் போது, மக்கள் இந்தப் பகுதியை விட்டு வெளியேறியபோது, மக்கள் பாரம்பரியமாக விவசாயம் செய்து வந்த நிலங்களை வன பாதுகாப்புத் திணைக்களமும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களமும் எல்லைக் கற்களைப் பயன்படுத்தி கையகப்படுத்தியது.”
போர் காரணமாக தமிழ் மக்கள் தங்களது காணியை விட்டு வெளியேறிய பின்னர், வன பாதுகாப்புத் திணைக்களமும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களமும் எவ்வாறு அவர்களின் வயல் நிலங்களுக்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களையும் கையகப்படுத்தியது என்பதை நாடாளுமன்றத்தில் புள்ளிவிபரங்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் காட்டியிருந்தார்.
“உதாரணமாக, திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் போர் காலத்திலே கைவிடப்பட்ட 205 சிறுகுளங்களையும் 25 அணைக் கட்டுகளையும் கொண்டமைந்த அண்ணளவாக 12,000 ஏக்கர் நிலத்தை வனத்துறை எல்லைக் கற்களை போட்டு பிடித்து வைத்துள்ளது . இதன் மூலம் 24,000 மெட்ரின் டன் நெல் உற்பத்தி இல்லாமல் போயுள்ளது.”
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வெருகல் பிரதேச செயலகப் பிரிவின் முழு நிலப்பரப்பையும் தாண்டிய நிலப்பரப்பின் மீது வன பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளின் உரிமையை அப்பகுதி மக்கள் கிண்டலாகக் கேள்வி எழுப்புவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
“திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் பரப்பளவு 32,042 ஏக்கர் ஆகும். இதில் வனஜீவராசிகள் திணைக்களம் 25,242 ஏக்கர் காணியை தமக்கு உரியது எனவும் வனவள பாதுகாப்புத் திணைக்களம் 11,906 ஏக்கர் காணியை தமக்கு உரியது எனவும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். மொத்தம் 32,042 ஏக்கர் பரப்பளவு நிலத்தை கொண்ட வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் எப்படி 37,148 ஏக்கர் நிலத்தை கைபற்றினார்கள்? இப்படியான திறமை இந்த நாட்டில் உள்ள வனத்துறை மற்றும் வனவிலங்குத் துறை அதிகாரிகளைத் தவிர உலகில் வேறு யாருக்கும் இருக்க முடியாது என மக்கள் கேலி செய்கின்றனர்.”
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் வனப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் ஆகியன எவ்வாறு காணிகளை கையகப்படுத்தியது என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் விளக்கினார்.
“அதேபோன்று திருகோணமலை மாவட்டதில் உள்ள குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 29,430 ஏக்கர் நிலத்தை வன பாதுகாப்புத் திணைக்களம் கையகப்படுத்தி வைத்துள்ளது, மேலும் 28,372 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முனைகிறது. வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் 7,330 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளது.”
திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் 3,820 ஏக்கர் காணியை பௌத்த பிக்குகள் புனித பூமி எனக் கூறி அபகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“தொல்பொருள் துறை 1,087 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளது, புத்த பிக்குகள் பூஜா பூமி என்ற பெயரில் 3,820 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளனர்.”
1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவு மக்கள் பயிர் செய்த 70,039 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றியதன் காரணமாக, ஒரு பருவத்தில் மாத்திரத் 140,000 மெட்ரிக் டன் நெல் அறுவடையை நாடு இழந்துள்ளதாக இளங்கை தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகிறார்.
“குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் 1985 ஆம் ஆண்டுக்கு முன்பு மக்கள் விவசாயம் செய்த 70,039 ஏக்கர் நிலம் நெல் உற்பத்தி செய்யாமல் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு போகத்தில் 140,000 மெற்றிக் தொன் நெல் உற்பத்தி குறைக்கப்படுகின்றது.”
திருகோணமலை மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து காணியை கையகப்படுத்துவதால் நாட்டின் நெல் உற்பத்தியில் ஏற்படும் பாதிப்பு குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
“தொல்பொருள் துறையும் மக்கள் விவசாயம் செய்த நிலங்களை தமது எல்லைக் கற்களைப் போட்டுப் பிடித்து வைத்துக்கொண்டு, அதனுள் தொல்பொருள் சின்னங்களைக் கண்டுபிடிக்க முடியாமலும் அதேவேளை அதனுள் மக்களை விவசாயம் செய்ய விடாமலும் தடுத்து வருகின்றது. எடுத்துக் காட்டாகத் திரியாய் கிராமத்தில் உள்ள ஏறத்தாள ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தினைக் கையகப்படுத்தி எல்லைக் கற்களை போட்டு மூன்று/நான்கு ஆண்டுகளாக பிடித்து வைத்துள்ளனர் எனினும் அப் பகுதியில் எதுவித தொல்பொருள் சின்னங்களையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுடன் அந்த நிலத்தை மீள மக்களுக்கு விவசாயம் செய்ய வழங்கவும் மனம் இன்றி இருக்கின்றனர்.”
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை அரச நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவது தொடர்பாக அப்போதைய (2023) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் நடத்திய கலந்துரையாடலில், 1985ஆம் ஆண்டு வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தின் வசம் இருந்த வரைபடத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கூறியிருந்தார்.
மே 6 ஆம் தேதி நடைபெற்ற, உள்ளூராட்சித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, போரின் போது கையகப்படுத்தப்பட்ட மக்களின் நிலங்களை ‘முறையான ஆய்வுக்குப் பின்னர்’ வனப் பாதுகாப்பு திணைக்களம் மீள கையளிக்கும் எனக் கூறியிருந்தார்.
“சில காணிகள் பாரம்பரிய பயிரிடப்பட்ட நிலங்கள், கூகுள் வரைபடங்களைப் பார்த்து வனப் பாதுகாப்பு திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்டன. அவை இந்தப் பகுதியில் பயிரிடப்பட்ட நிலங்கள். மக்களின் நிலங்கள். முறையான ஆய்வுக்குப் பின்னர் அவற்றை மீள கையளிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.”
அரசாங்க பாதுகாப்புப் படைகளுக்கு மேலதிகமாக, மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, தொல்பொருள் திணைக்களம் மற்றும் வன பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவை வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை வலிந்து கையகப்படுத்துவதாக தொடரச்சியாக குற்றஞ்சாட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.