அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் இருந்து வெளியேறுவதாக, டெஸ்லா நிறுவன தலைவரும் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருமான எலன் மஸ்க் அறிவித்துள்ளார்.
ட்ரம்ப் ஆட்சியில் அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக ‘டோஜ்’ என்ற துறை உருவாக்கப்பட்டு, அதன் செயல் தலைவராக எலன் மஸ்க் நியமிக்கப்பட்டார். அதுமட்டுமன்றி, உடன் பல மாற்றங்களை அதிரடியாக செயற்படுத்தினார்.
அரசு ஊழியர்களை பணியை விட்டு நீக்குதல், அரசு செலவுகளைக் குறைத்தல் உள்ளிட்டவற்றில் மஸ்க் தலைமையிலான ‘டோஜ்’ துறை தீவிரமாக ஈடுபட்டது. இதனால் மஸ்க் விமர்சனங்களுக்கும் உள்ளானார். எவ்வாறாயினும், எலன் மஸ்க் பொறுப்பேற்ற பின் இதுவரை அரசின் செலவுகளில் 10 லட்சம் கோடி ரூபாயை சேமித்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
இந்நிலையில் ட்ரம்பின் நிர்வாகத்தில் இருந்து வெளியேறுவதாக எலன் மஸ்க் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அரசின் மிகச்சிறந்த ஒரு துறையை நிர்வகிக்க வழங்கிய வாய்ப்பிற்கு ட்ரம்பிற்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். தான் விலகினாலும், டோஜ் தொடர்ந்து செயற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.