2025ஆம் ஆண்டு மே 29ஆம் திகதி நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை பெற்று சிறையில் இருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். இது தொடர்பான ஆவணங்கள் தற்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பை ரத்து செய்யுமாறு கோரி, காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு நேற்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரஜித் பெரேரா இதனைத் தெரிவித்தார்.
இந்த மனு, எஸ். துரைராஜா, குமுதுனி விக்ரமசிங்க, மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, இந்த வழக்கு தொடர்பாக ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், இந்த மனுவை 2025 ஓகஸ்ட் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டது. இந்நிலையில், ஞானசாரரின் பொதுமன்னிப்பு ரத்தாகுமா இல்லையா என்ற கேள்விகள் தற்போது பரவலாக எழுந்துள்ளன.
சிங்கள பௌத்த தேசியவாதக் குழுவென அறியப்படும் பொதுபல சேனாவின் பொதுச்செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர், மத நிந்தனை, நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்ட ஒருவராவார்.
சட்டப் பிரச்சினைகள்
2018 ஓகஸ்ட் மாதம் நீதிமன்ற வளாகத்திற்குள் அவர் நடந்து கொண்ட விதம் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, காணாமல் போன பத்திரிகையாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொடவை நீதிமன்ற அமர்வின் போது அச்சுறுத்தியதற்காக, ஞானசார தேரர் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகி நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. அதற்காக, 6 வருடங்களில் நிறைவடையும் வகையில், 19 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பொதுமன்னிப்பும் சட்டச் சவால்களும்
சிறைவாசம் அனுபவித்து வந்த ஞானசாரர், 2019 மே 23ஆம் திகதி, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பொதுமன்னிப்பில் விடுதலையானார். இந்த மன்னிப்பானது, பரவலான விமர்சனங்களையும் சட்ட சவால்களுக்கும் வித்திட்டது. மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் சந்தியா எக்னெலிகொட ஆகியோர் அடிப்படை உரிமைகள் மனுக்களை தாக்கல் செய்தனர். இவ்வாறு மன்னிப்பு வழங்கப்பட்டமையானது, நீதித்துறை சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், சட்டத்தின் முன் சமத்துவம் என்ற கொள்கையை மீறுவதாக அமைவதாகவும் அவர்கள் வாதிட்டனர்.
இந்த மன்னிப்பு ஒரு ஆபத்தான முன்னுதாரணமாக அமைந்துள்ளதாகவும், செல்வாக்கு மிக்க நபர்கள் அரசியல் தலையீடு மூலம் நீதியைத் தவிர்க்க முடியும் என காட்டுவதாகவும், இதனால் இலங்கையில் வகுப்புவாத பதட்டங்களை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
இதனடிப்படையில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதோ’டு, ஓகஸ்ட் 26ஆம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதுமாத்திரமன்றி, இஸ்லாம் மதத்தைப் பற்றி அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் ஞானசார தேரருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரது பிணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தண்டனையை எதிர்த்து அவர் மேன்முறையீடு செய்துள்ளார்
இலங்கை முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிராக மத மற்றும் இன பதட்டங்களைத் தூண்டுவதாக அடிக்கடி ஞானசாரர் சரச்சைகளுக்கு உள்ளாகின்றார். இலங்கை மத விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடு குறித்து அவர் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும் சிங்கள பௌத்தர்களை ஓரங்கட்டுவதை நோக்கமாகக் கொண்ட சர்வதேச நிதியுதவிக்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும கூறியுள்ளார்.
இவ்வாறான வெறுப்புப் பேச்சு மற்றும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபடுவதால், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் சர்வதேச ரீதியில் அவருக்கெதிராக கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறான சந்தர்ப்பத்தில், அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளமையானது, நீதித்துறையின் தீர்ப்பினை குறைமதிப்பிற்கு உள்ளாக்கும் செயற்பாடு என்றும், நீதித்துறை மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை குறைவடையும் நிலை ஏற்படும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
செய்தியாக்கம் – கே.கே.