‘வடக்கு அரசியல் அதிகாரத்தின் வேண்டுகோளின் பேரில்’ வடக்கு காணி வர்த்தமானி இரத்தானது

0
10
Article Top Ad

தனிப்பட்ட உரிமையை உறுதிப்படுத்துவது கடினமாக காணப்படும் வடக்கில் சுமார் ஆறாயிரம் ஏக்கர் கடலோர காணிகளை கையகப்படுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை, ஆட்சேபனைகளை ஏற்று, மீளப்பெற்ற காணி அமைச்சு, அந்த காணி சிக்கலைத் தீர்ப்பதற்கு மாகாண குடியிருப்பாளர்கள் மற்றும் பொது மக்களின் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பைப்பெற ஒப்புக்கொண்டுள்ளது.

மார்ச் 28, 2025 அன்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் இல. 2430 இற்கு அமைய அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 5,941 ஏக்கர்களின் உரிமை மூன்று மாதங்களுக்குள் உறுதிப்படுத்தப்படாவிட்டால், அவை அரசால் கையகப்படுத்தப்படும் என காணி உரித்து நிர்ணயத் திணைக்களம் எச்சரித்திருந்தது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய, வவுனியாவைத் தவிர்த்து, வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களிலும் மொத்தமாக 5,941 ஏக்கர் காணி உள்ளடக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,703, யாழ்ப்பாண மாவட்டத்தில் 3,669, கிளிநொச்சி மாவட்டத்தில் 515 மற்றும் மன்னார் மாவட்டத்தில் 54 ஏக்கர் காணி உள்ளடங்கும்.

மே 26 அன்று சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க, ‘காணி தீர்வு குறித்த முதற்கட்ட அறிவிப்பு தொடர்பான ஆலோசனையைப் பெறுதல்’ என்ற தலைப்பில், 2430 ஆம் இலக்க வர்த்தமானி அறிவிப்பை மீளப்பெற தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனக் கோரினார்.

“பிற நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான நேரத்தையும் சூழலையும் உருவாக்குவதற்காக, வெளியிடப்பட்ட 28.03.2025 திகதியிடப்பட்ட 2430 ஆம் இலக்க வர்த்தமானி அறிவிப்பை மீளப்பெறுவது அவசியம். அதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை உருவாக்குமாறு நான் தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன்.”

வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்வதற்கான காரணம், வட மாகாணத்தில் வாழும் மக்களிடையே எழுந்துள்ள ‘தவறான கருத்துக்கள்’ ஆகும், எனினும் அந்தக் கடிதத்தில் அந்தத் தவறான கருத்துக்கள் என்னவென்று குறிப்பிடப்படவில்லை.

“எவ்வாறெனினும், இந்த தீர்வு குறித்த அறிவிப்பு தொடர்பாக வட மாகாணத்தில் வசிக்கும் மக்களிடையே தவறான கருத்துக்கள் எழுந்துள்ளன, அதற்கமைய, இந்த வர்த்தமானி அறிவிப்பை மீளப்பெற நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாண அரசியல் அதிகாரம் என்னிடம் கோரியுள்ளது,” என காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க கூறியிருந்தார்.

வடக்கு மாகாணத்தின் அரசியல் அதிகாரம் யாரைக் குறிப்பிடுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், வடக்கு மற்றும் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் அருண் ஹேமச்சந்திரன் ஆகியோர் இரத்து செய்யப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் அறிந்திருக்கவில்லை.

எனினும், வடக்கில் உள்ள தமிழ் அரசியல் ஆர்வலர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்ச்சைக்குரிய வர்த்தமானியைப் பற்றி அறிந்ததிலிருந்து அதை கடுமையாக எதிர்த்து வந்தனர்.

மே 23 அன்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நாடாளுமன்றத்தின் குழு அறை இல. 1 இல் நடைபெற்ற சந்திப்பின்போது வர்த்தமானி அறிவிப்புக்கு வடக்கு மற்றும் கிழக்கின் மக்கள் பிரதிநிதிகள் எழுப்பிய ஆட்சேபனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளமை, விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க சட்டமா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

“இந்த வர்த்தமானி அறிவிப்பில் உரிமைகோரல்களைச் சமர்ப்பிப்பதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்பதும், அதன் பின்னர், உரிமைகோரல்களைச் சமர்ப்பிக்கப்படாத காணிகள் அரசாங்கத்திற்குச் சொந்தமானதாக அறிவிக்கப்படும் என்பதும் அவர்கள் எழுப்பும் முக்கிய காரணம். மேலும், அந்த நேரத்தில் வடக்கு மாகாணத்தில் நிலவிய போர் சூழ்நிலை காரணமாக, அவர்களின் சொந்த காணிகளின் உரிமையை நிரூபிக்க எந்த ஆவணங்களும் இல்லை எனவும், மேலும், கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் வெளிநாடுகளில் வசிப்பதால், அவர்கள் தங்கள் உரிமைகோரல்களைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பையும் இழந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்படுகிறது. மேலும், தற்போதைய தலைமுறையினர் தங்கள் மூதாதையரின் காணிகளை அடையாளம் காண்பதில் சிரமங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.”

இந்தக் கலந்துரையாடலின் போது, மேற்கண்ட பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தி, தீர்வுச் செயல்முறையைத் தயாரித்து, இதற்காக மக்கள் பிரதிநிதிகளின் ஒப்புதலைப் பெற்று, இந்த வியத்தை தொடர்ந்து முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது என, விவசாயம, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க குறிப்பிடுகின்றார்.

“தேவையான ஒப்புதலைப் பெற்று, பிறகு தீர்வுச் செயல்முறையை மீண்டும் தொடங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும், அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு, செயல்முறை முறையாக ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் கருதினார்,” என்ற அடிப்படையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பு இல. 2430 ஐ மீளப்பெற தேவையான சட்ட ஏற்பாடுகளை செய்யுமாறு, செயலாளர் டி.பி.விக்ரமசிங்க, சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here