பெரும்பான்மை அதிகாரத்தைப் பெற்றுள்ள 161 உள்ளூராட்சி மன்றங்களின் சபைகளை அமைக்கும் நடவடிக்கை நாளை (02) இடம்பெறும். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
339 உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பாக மே 06 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்டு மற்றும் தெரிவு செய்து அனுப்பப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் தேர்தல் ஆணைக்குழுவால் நேற்று வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டன.
161 உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகள் அல்லது சுயாதீன குழுக்கள் பெரும்பான்மை அதிகாரத்தைப் பெற்றிருந்தாலும், 178 நிறுவனங்கள் தொடர்பாக எந்த ஒரு கட்சியோ அல்லது சுயாதீன குழுவோ முழுமையான வெற்றியைப் பெறவில்லை.
இந்நிலையில், தெளிவான பெரும்பான்மை இல்லாத 178 மன்றங்களுக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் நாளை ஆரம்பமாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி மன்ற நியமனங்கள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி – https://documents.gov.lk/view/extra-gazettes/2025/5/2438-92_T.pdf