யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினராக முன்னாள் விரிவிரையாளர் சுந்தரமூர்த்தி கபிலன் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் உறுதியுரை ஏற்கும் நிகழ்வு நேற்று (31) அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது. இதன் போது தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் தங்கள் உறுதியுரையை மேற்கொண்டார்கள். இதில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர சபையில் பெயர் வேட்பாளராக போட்டியிட்ட சுந்தரமூர்த்தி கபிலனும் உறுதியுரை மேற்கொண்டார்.
யாழ். மாநகர சபை எல்லைக்குள் வசிக்காத தேசிய மக்கள் சக்தியில் யாழ். மாநகர சபை மேயர் வேட்பாளர் கபிலன், ஒருபோதும் மேயராக முடியாதென்றும், குறைந்தபட்சம் உறுப்பினராகவேனும் பதவி வகிக்க முடியாது என்றும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். அவ்வாறு உறுப்பினராக நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்தால் அதற்கு மறுநாளே அதனை தடுப்பதற்கு வழக்குத் தாக்கல் செய்வோம் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறான பின்னணியில் கபிலன் உறுதியுரை ஏற்றுள்ளார்.
இதேவேளை, இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகரன், யாழ்.மாவட்டத்தில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என்றும், மேலும் சில சபைகளில் எதிர்க்கட்சி தலைவராகக்கூட சிறப்பாக செயற்பட முடியும் என்றும் குறிப்பிட்டார்.