யுத்த காலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதில் காணப்படும் தடைகளை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
இதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களைத் திருத்துவதற்கு தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதற்காக விரைவில் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து அனுமதி பெறப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு வந்த மூன்று வயது குழந்தை உட்பட மூவர், தலைமன்னார் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இந்தியாவின் இராமேஸ்வரத்தில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 24 வயது இளம் தம்பதியினர் மற்றும் மூன்றரை வயது குழந்தை என பொலிஸார் கூறினர். இவர்கள் 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதேபோன்று, அண்மையில் 35 வருடங்களில் பின்னர் நாடுதிரும்பிய 75 வயதான முதியவர் கைதுசெய்யப்பட்டு அவர் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
அகதிகளாக சென்றவர்கள் நாடு திரும்பும்போது கைதுசெய்வது பற்றி பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, ஏனையோரை நாடு திரும்பாமல் தடுக்கும் முயற்சியாக இது உள்ளதென குற்றஞ்சாட்டப்பட்டது. இதன் பின்னணியில் அரசாங்கம் இதிலுள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவுள்ளது.