‘இலங்கைக்கு வர வேண்டாம்’ மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அறிவுறுத்தல்

0
8
Article Top Ad

ஒன்பது வருடங்களுக்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தலைவர் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளமை போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்களிடையே சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு வருகைத்தர உள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

போரினால் நீதி மறுக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கப் போராடும் முன்னணியில் இருக்கும் தாய்மார்கள், அடுத்த ஜெனீவா மாநாட்டிற்குப் பின்னர் இந்தப் பயணம் இடம்பெற வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளனர்.

போரின் முடிவில் காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் தலைவிதியை வெளிப்படுத்தக்கோரி, இலங்கையின் மிக நீண்ட போராட்டத்தின் 3,007ஆவது நாளில் முல்லைத்தீவில் திரண்ட போரால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள், உயர்ஸ்தானிகரின் வருகையை, தங்களுக்கு விசுவாசமான பிரதிநிதிகளைப் பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட பயணம் என வர்ணித்துள்ளனர்.

முல்லைத்தீவில் நடந்த போராட்டத்தின் போது வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சனி, அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து சந்தேகங்களை எழுப்பியதோடு, போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதிக்கு சர்வதேச சக்திகள் ஆதரவளிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

“வரவிருக்கும் ஐ.நா தொடர் எங்களுக்கு ஒரு முக்கியமான தொடராக அமையவுள்ளது. அந்த ஐ.நா தொடரிலே, இலங்கை அரசாங்கம் தமக்கு சார்பானவர்களை வைத்து ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதியை அழைத்து அவர்களோடு பேசுவதற்கு முயற்சிப்பாக நாங்கள் அறிகின்றோம். ஆகவே எங்களுடைய வலிகளையும், வேதனைகளையும் உணர்ந்துகொண்டு, மனிதநேயங்களை நேசிக்கின்ற அந்த நாடுகள் ஒன்றிணைந்து எங்களுக்கான சர்வதேச நீதியை பெற்றுத்தர, எங்களுடைய நீதியை பேச, எங்களுடைய பிரச்சினைகளை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுச் சென்று நீதியை பெற்றுத்தர, செயற்பட வேண்டுமென நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.”

செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு வருகை தரக்கூடாது என தாய் யோகராசா கனகரஞ்சனி மேலும் வலியுறுத்தினார்.

“செப்டெம்பர் மாத கூட்டத் தொடருக்கு முன்னர் அவர் இங்கு வரக்கூடாது. அவர் எங்களுக்காக பேச உண்மையாகவே வேண்டுமென்றால், அந்த கூட்டடத்தில் எங்களுடைய பிரச்சினைகளை பேசி எங்களுக்கான நீதியை பெற்றுத்தருவதற்காக ஒன்றிணையுமாறு மனிதநேயமிக்க நாடுகளிடம் பாதிக்கப்பட்ட மக்களாக நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். எங்களுக்கான நீதி சர்வதேசத்திடம் இருந்துதான் கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை கூற் இலங்கை அரசு ஒருபோதும் முன்வராது.”

ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் இறுதியாக 2016 இல் இலங்கைக்கு விஜயம் செய்தார். 2016 ஆம் ஆண்டு, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியில் இருந்தபோது, அப்போதைய மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இளவரசர் செய்ஹத் அல் ஹுசைன் நாட்டிற்கு விஜயம் செய்தார். அந்த நேரத்தில் நாட்டை ஆட்சி செய்த நல்லாட்சி அரசாங்கம், போர்க்குற்றங்கள் உட்பட மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் என்ற சர்வதேச சமூகத்தின் நம்பிக்கைக்கு இந்தப் பயணம் ஒரு ஊக்கமாக அமைந்தது.

2017 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று முல்லைத்தீவில் ஆரம்பித்த போராட்டத்தின் 3,007வது நாளில், காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்கள் பற்றிய உண்மையை வெளிக்கொணர, முல்லைத்தீவில் போராட்டத்தை ஆரம்பித்த தாய்மார்கள், ‘விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது, வெள்ளை வேன்களில் கடத்திச் செல்லப்பட்டவர்கள் எங்கே, வீடுகளுக்குள் வந்து இழுத்துச் செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது’ போன்ற கோஷங்களை எழுப்பினர்.

‘குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்களா?, நீங்கள் அழைத்துச் சென்ற எங்கள் பிள்ளைகனள் எங்கே?’ என சிங்களத்தில் எழுதப்பட்ட பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில், மே 28 அன்று அம்பாறை திருக்கோவிலில் போராட்டம் நடத்தப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here